
டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
ஏ.பி.வி.பி நிர்வாகி Bharat Sharma என்பவரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படம் மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களை தாக்கிய சாதாரண உடையில் இருந்த நபர் படங்களை இணைத்து பதிவிட்டுள்ளனர்.
நிலைத் தகவலில், “போலிஸ் வேடத்தில் ABVP பயங்கரவாதிகள் மாணவர்களை கடுமையாக தாக்கியவன்.. இவர்களுக்கு போலிஸ் உடையை கொடுத்து அடிக்க சொன்னது யார்???” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Umar Farook என்பவர் 2019 டிசம்பர் 16ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ளது போன்று Bharat Sharma என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் உள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், ஃபேஸ்புக்கில் அப்படி ஒரு ப்ரொஃபைல் இல்லை. சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் காரணமாக, ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக டெல்லி போலீஸ் ஏதும் விளக்கம் அளித்துள்ளதா என்று தேடினோம். அப்போது, பிசினஸ் ஸ்டாண்டர்டு, தி பிரிண்ட் இதழ்கள் மற்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் உள்ளிட்டவை வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தன.
ஏ.என்.ஐ-யில் டெல்லி கிழக்கு டி.சி.பி சின்மோய் பிஸ்வால் அளித்திருந்த பேட்டியில், “படத்தில் உள்ள நபர் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை. படம் வைரல் ஆனதைத் தொடர்ந்து நாங்கள் அவர் யார் என்று தேடினோம். அப்போது, அவர் பந்தோபஸ்துக்காக அழைக்கப்பட்ட காவலர் என்று தெரிந்தது. கூட்டத்தினர் மத்தியிலிருந்து கலவரம் செய்பவர்களை கண்டறியவும் அவர்களை கைது செய்யவும் இப்படி பொது மக்கள் போன்று சாதாரண உடையில் போலீசார் இருப்பது வழக்கம்தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

business-standard.com | Archived Link 1 |
theprint.in | Archived Link 2 |
aninews.in | Archived Link 3 |
இது தொடர்பாக டெல்லி தென் கிழக்கு போலீஸ் டி.சி.பியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவும் வெளியாகி இருந்தது. அதில், “தவறான பிரசாரம். சாதாரண உடையில் இருக்கும் நபர் தென்கிழக்கு மாவட்ட போலீஸ் கான்ஸ்டபிள். அவருக்கும் சமூக ஊடகங்களில் பரவும் ப்ரொஃபைல் படத்துக்கும் தொடர்பு இல்லை” என்று குறிப்பிட்டிருந்தனர்.
Archived Link |
ஹிந்து நாளிதழ் நிருபர் ஹேமந்த் பண்டாரி போலீஸ் அதிகாரியிடம் ஒரு பேட்டியை எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதிலும் கூட இந்த தகவல் தவறு என்று போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
Archived Link |
ஏ.பி.வி.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “டெல்லி போலீசாரே இந்த நபர் ஏ.பி.வி.பி இல்லை என்று விளக்கம் அளித்த பிறகும்கூட சில ஊடகங்கள் இவரை ஏ.பி.வி.பி நிர்வாகி என்றே கூறிவருகின்றன. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தது.
Archived Link |
ஏ.பி.வி.பி நிர்வாகி என்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் படத்தில் உள்ளவர் போலீஸ் கான்ஸ்டபிள்தான் என்று போலீசார் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசாருடன் இணைந்து மாணவர்களை தாக்கியவர் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:போலீஸ் வேடத்தில் இருந்த நபர் ஏ.பி.வி.பி நிர்வாகியா? டெல்லி போலீஸ் மறுப்பு!
Fact Check By: Chendur PandianResult: False

What is the proof they shown to prove their stand? only a verbal statement to media & social media posting is a proof?