
இலங்கையில் அகழ்வாராய்ச்சியின்போது அனுமான் பயன்படுத்திய மிகப்பெரிய கதாயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகத்தில் படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் பயன்படுத்திய கதாயுதம் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதைத் தூக்கவே இரண்டு கிரேன் இயந்திரம் தேவைப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். கடைசியில் ஜெய் அனுமான் போற்றி என்று முடித்துள்ளனர். இலங்கையில் எந்த இடத்தில், எப்போது கிடைத்ததென கூறப்படவில்லை. படத்தில் பார்ப்பதற்கு, கதாயுதம் மிகப்பெரியதாக பிரம்மாண்டமாக உள்ளது. கிரேனில் தூக்குவதை ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர். ஆன்மிகம் சார்ந்த விஷயம் என்பதால் இதன் நம்பகத்தன்மையை தெரிந்துகொள்ளாமல் ஆயிரக் கணக்கானோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
ராமாயணத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் அனுமார். நாடு முழுவதும் அனுமார் பக்தி அதிகமாக உள்ளது. இதனால், பல ஆண்டுகளாகவே, அனுமார் கதாயுதம் கிடைத்தது. ராமாயண கால எலும்பு கூடு கிடைத்தது என்று பல தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் இந்த படம் உண்மைதானா என்று கண்டறிய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம்.

அப்போது, மேற்கண்ட படம் உண்மையானதுதான். ஆனால், இலங்கையில் கதாயுதம் கிடைத்தது என்ற தகவல் போலியானது என்பது தெரிந்தது. பலரும், இந்த கதாயுதம் தொடர்பான செய்தியைப் பகிர்ந்திருந்தனர். 2013ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்த கதாயுதம் நிறுவப்பட்டுள்ளது. அப்போது இருந்தே இந்த வதந்தி வைரல் ஆகிக்கொண்டே இருப்பது தெரிந்தது. இந்தியர்களை முட்டாள் ஆக்கிய 12 பொய்கள் என்று இணையத்தில் செய்தியே இருந்தது. இந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுதொடர்பாக ஆங்கிலத்தில் வெளியான உண்மை கண்டறியும் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த கதாயுதம் பழமையானது இல்லை, இந்தூரில் நிறுவப்பட்டது என்பதற்கான வீடியோவும் கிடைத்தது.
முடிவு:
இந்த படத்தில் இருப்பது இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அனுமார் பயன்படுத்திய தங்கத்திலான கதாயுதம் இல்லை. இந்தூரில் ஒரு கோவிலில் வைக்கப்பட்டுள்ள கதாயுதம் என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் கண்டுபிடிக்கப்பட்டதா?
Fact Check By: Praveen KumarResult: False
