
‘’ராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதில், இந்து மத சன்னியாசிகள் சிலருடன் ராஜீவ் காந்தி நிற்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1989 ஆண்டு நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்த கொண்டதாக கூறும் கருப்பு வெள்ளை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில், இது எப்போது, எங்கே எடுத்த புகைப்படம் என விளக்கம் தரும்படி நமது வாசகர்கள் சிலர் கேட்டுக் கொண்டதால், இந்த புகைப்படத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் பற்றிய தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில், அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்து பார்த்தோம். அப்போது, இது கடந்த 1989ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி, டெல்லியில் ‘ஹரே கிருஷ்ணா’ நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது எடுத்த புகைப்படம் என விவரம் கிடைத்தது.
FactsAndDetails.com Link I Wikimedia Commons Link
அதேசமயம், ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில், 1989ம் ஆண்டில்தான் அயோத்தி பகுதியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டவும் முதன்முதலாக அனுமதி அளிக்கப்பட்டதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
எனவே, வேறு ஒரு நிகழ்வுடன் தொடர்புடைய பழைய புகைப்படத்தை எடுத்து, ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வோடு தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் குழப்பம் விளைவிக்கக்கூடிய தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:ராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
