
தேசத்துக்காக இன்னுயிர் நீத்த ராணுவ வீரரின் உடல் அருகே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் சிரித்து மகிழ்ந்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
குளிர்சாதன இறுதி ஊர்வ பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது போன்று உள்ளது. அதற்கு முன்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சிலர் சிரித்து பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நம் தேசத்திர்க்காக தன் இன்னுயிர் நீத்த ராணுவ வீரரின் உடலுருகே சிரித்து மகிழும் பாஜக தேச பக்தர்கள் யோகி & உபி பிஜேபி Rss தலைவர்கள்.. இவர்களுக்கா உங்கள் ஓட்டு..?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Shami Kpm என்பவர் 2021 மார்ச் 11 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது என்பதன் மூலம் இறந்த நபர் நாட்டுக்காக சேவையாற்றியவர் என்பது தெரிகிறது. இறுதிச் சடங்கு நடைபெறும் வீட்டில் சிரித்து பேசுவது நாகரீகம் இல்லை. எனவே, எந்த விதத்திலும் அவர்கள் சிரித்து பேசியது சரி என்று கூற முடியாது. இறந்த நபர் யார் என்று மட்டுமே நாம் ஆய்வு மேற்கொண்டோம். இந்த வீடியோவை தமிழில் 2019ம் ஆண்டில் இருந்து பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோவை InVid & WeVerify தளத்தில் பதிவேற்றி புகைப்படங்கள் மாற்றினோம். இந்த புகைப்படங்களை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இந்த வீடியோ பற்றிப் பல ஃபேக்ட் செக் ஊடகங்களும் கட்டுரை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு வேறு என்ன ஆதாரங்கள் கிடைக்கின்றன என்று பார்த்தோம்.
அப்போது பல செய்தி இணையதளங்களில் 2018 அக்டோபர் 21ம் தேதி வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில், என்.டி.திவாரி இறுதிச் சடங்கின் போது யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சர்கள் சிரித்து பேசி மாட்டிக்கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: latestly.comI Archive 1 I news18.com I Archive 2
செய்தியைப் படித்துப் பார்த்தபோது, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் உடல் இறுதி அஞ்சலிக்காக உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் ஆளுநர் லால்ஜி டான்டன், உ.பி அமைச்சர்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
Niraj Bhatia என்பவர் வெளியிட்ட ட்வீட் பதிவை அடிப்படையாக வைத்து அவர்கள் செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது.
இதன் மூலம் இறுதிச் சடங்கின் போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் சிரித்து பேசியது உண்மைதான் என்றும் ஆனால் அது ராணுவ வீரரின் இறுதிச் சடங்கு இல்லை, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் இறுதி மரியாதை நிகழ்ச்சி என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி இறுதி அஞ்சலியில் யோகி ஆதித்யநாத் சிரித்து பேசியதை ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ராணுவ வீரர் உடல் அருகே சிரித்து பேசிய யோகி ஆதித்யநாத்?- ஃபேஸ்புக்கில் பரவும் தவறான தகவல்
Fact Check By: Chendur PandianResult: Partly False

உண்மை நிகழ்வை அறிந்து கொண்டேன்.தகவல்களைப் பகிர்வதில் கவனம் செலுத்துகிறேன்.