
கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு. பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு. மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவை Latha Sampath Kumar என்பவர் 2021 ஆகஸ்ட் 13ம் தேதி பகிர்ந்திருந்தார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் தாக்கல் செய்யப்பட்டது. பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி பட்ஜெட் உரையை புறக்கணிப்பதாக அ.தி.மு.க அறிவித்து வெளிநடப்பு செய்தது. இது தொடர்பான செய்தி, நியூஸ் கார்டுகள் ஊடகங்களில் வெளியானது.
வெளியான ஒரு சில மணி நேரத்தில் அந்த நியூஸ் கார்டை எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டு வருவதைக் காண முடிந்தது. விளையாட்டுக்காக செய்தார்களா, விஷமத்தனமாக செய்தார்களா என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை தேடினோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். அதில் “மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்” என்ற பகுதி மட்டும் தனியாக சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. புதிய தலைமுறையின் வாட்டர் மார்க் லோகோ பாதி வெட்டப்பட்டிருந்தது. இது எடிட் செய்யப்பட்டது என்பதை இதுவே உறுதி செய்தது.
புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். அதில், “பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு பேச வாய்ப்பு தரவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து விஷமத்தனமான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
மேலும் இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி சரவணனைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் என்று பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
முடிவு:
கணினியை இயக்கத் தெரியாததால் அதிமுக வெளிநடப்பு செய்தது என்று பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கணிப்பொறி இயக்கத் தெரியாததால் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: Altered
