
எல்லையில் மலைகள், காடுகளில் கிடைத்த இடத்தில் படுத்து ஓய்வெடுக்கும் இந்திய ராணுவ வீரர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது இந்திய ராணுவ வீரரின் படமா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
மண் குகைக்குள் ராணுவ வீரர் ஒருவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம் இங்கே நிம்மதியாக தூங்க, எல்லையை காக்கும் பணிகளுக்கிடையே கிடைக்கும் ஓய்வை, காடுகளில் மலைகளில் கழிக்கும் நமது இந்திய ராணுவ சகோதரர்களுக்கொரு சல்யூட் போடுங்களேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Push Pagaran என்பவர் புஷ்பா என்ற ஃபேஸ்புக் குழு பக்கத்தில் 2020 டிசம்பர் 14ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மக்கள் நிம்மதியாக தூங்க எல்லையில் ராணுவ வீரர்கள் சவாலை எதிர்கொள்கின்றனர் என்ற வகையில் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பல வெளிநாட்டுப் படங்களை எல்லாம் கொண்டு வந்து இந்திய ராணுவ வீரர்கள் என்ற வகையில் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவும் தொடர்ந்து இது போன்ற படங்கள் பற்றி ஆய்வு நடத்திக் கட்டுரை வெளியிட்டு வருகிறது.
இந்த புகைப்படம் இந்திய ராணுவ வீரருடையதா என்று ஆய்வு செய்தோம். படத்தில் உள்ள நபர் தாடி வைத்துள்ளார். எனவே இவர் இந்தியர்தானா என்று சந்தேகம் எழுந்தது. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படத்தை பல ஆண்டுகளாக இந்திய ராணுவ வீரர் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து வந்திருப்பது தெரிந்தது.
தொடர்ந்து தேடியபோது, ஈராக் ராணுவ வீரர் என்று குறிப்பிட்டு சில பதிவுகள் கிடைத்தன. மேலும், ஈராக் ஊடகங்களில் 2015ம் ஆண்டு வெளியிட்ட செய்திகளும் நமக்குக் கிடைத்தன.
அசல் பதிவைக் காண: jamnews.com I Archive 1 I fa.abna24.com I Archive 2
jamnews.com என்ற ஈராக் ஊடகம் இந்த படங்களை 2015 ஜனவரி 31ம் தேதி பதிவிட்டிருப்பது தெரிந்தது. அதில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரை எதிர்த்துப் போரிடும் ஈராக் பாதுகாப்புப் படையினர் தங்குவதற்கு இடமின்றி கிடைத்த இடங்களில் தூங்கி ஓய்வெடுப்பதாக குறிப்பிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த ஒரு படம் மட்டுமின்றி வேறு சில படங்களையும் அவர்கள் பகிர்ந்திருந்தனர்.
இந்த படங்களை ஆய்வு செய்தபோது, ஒரு ராணுவ வீரரின் கையில் உள்ள தேசியக் கொடி பட்டை ஓரளவுக்கு தெரிந்தது. ஈராக் ராணுவ வீரரின் தேசியக் கொடி பட்டையுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்தோம். இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தன.
அசல் பதிவைக் காண: militarytimes.com I Archive
இதன் மூலம் இந்த ராணுவ வீரர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் ராணுவ வீரரின் புகைப்படம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
புகைப்படத்தில் இருக்கும் ராணுவ வீரர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்தள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்திய ராணுவ வீரர் என்று கூறி பரவும் ஈராக் புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: False
