FACT CHECK: தாழ்த்தப்பட்ட ஆசிரியை மீது உயர் வகுப்பு மாணவர்கள் தாக்குதலா?- உண்மை அறிவோம்!

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியையை உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியையைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது உ.பி யில் தாழ்த்தப்பட்ட ஆசிரியைக்கு உயர் சாதி மாணவர்களால் நேர்ந்த கொடூரம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Nidhi என்பவர் அக்டோபர் 11, 2020 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேசத்தில் சாதி ரீதியான தாக்குதல் அதிகம் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவை தொடர்பாக அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு ஆய்வு மேற்கொண்டு கட்டுரை வெளியிட்டு வருகிறது.

தற்போது தாழ்த்தப்பட்ட ஆசிரியை ஒருவரை உயர் சாதி மாணவர்கள் தாக்கியதாக கூறப்படவே அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலியில் 2019 நவம்பரில் நடந்திருப்பது தெரிந்தது. எதனால் தாக்குதல் நடந்தது என்று பார்த்தோம்.

Archive

முன்னணி ஊடகங்கள் அனைத்தும் ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்ட தகவல் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், ரேபரேலி காந்தி சேவா நிகேதன் மாணவர்கள் குழந்தைகள் நல அலுவலகர் மம்தா தூபேவை தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

மேலும் அதில், “முன்பு கழிவறையின் உள்ளே வைத்து தன்னை மாணவர்கள் பூட்டியதாகவும், இது தொடர்பாக காந்தி சேவா நிகேதன் நிர்வாகிகளிடம் புகார் செய்த போது, மாணவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரிவித்துள்ளனர் என்றும் மம்தா தூபே குற்றம்சாட்டியிருந்தார்.

டைம்ஸ் நவ், என்டிடிவி உள்ளிட்ட ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளையும், ஜாக்ரன் இந்தி ஊடகத்தில் வெளியான செய்தியை மொழிமாற்றம் செய்தும் படித்தோம். அதில், “ரேபரேலியில் உள்ள காந்தி சேவா நிகேதனில் மம்தா தூபே பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிக்கும் இடையே மோதல் ஏற்படவே, மம்தா தூபேவை அவர் பணியிலிருந்து நீக்கியுள்ளார்,’’ என எழுதியுள்ளனர்.

அசல் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I timesnownews.com I Archive 2

republicworld.com I Archive 3 I jagran.com I Archive 4

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மம்தா தூபே முறையிடவே, மீண்டும் அவர் அந்த பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்ட 2வது நாளில் காந்தி சேவா நிகேதன் நிர்வாகி மம்தா தூபேவுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிட்டுள்ளார். இது தொடர்பாக மம்தா தூபே காந்தி சேவா நிகேதன் நிர்வாகி மீது போலீசில் புகார் செய்துள்ளார். 

அதே நேரத்தில் மம்தா தூபே மாணவர்களைப் பார்த்து அநாதைகள் என்று கடும் சொற்களால் திட்டியதால் மாணவர்கள் கோபப்பட்டுத் தாக்கினார்கள் என்று காந்தி சேவா நிகேதன் நிர்வாகி தரப்பில் கூறப்படுகிறது என்று இருந்தது. பல முன்னணி ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தியிலும் இந்த தகவல் இருந்தது. எதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியையை உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக கூறப்படவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் விகாஸ் தூபே என்ற நபரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். அப்போது தூபே என்பது பிராமண வகுப்பின் ஒரு பெயர் என்று செய்தி படித்த நினைவு இருந்தது.

எனவே, தூபே என்பது தாழ்த்தப்பட்ட சாதியா என்று தேடினோம். தூபே என்பது வட இந்தியாவில் உள்ள பிராமண சமூகத்தின் ஒரு பிரிவு என்று தெரியவந்தது.

அசல் பதிவைக் காண: wikipedia.org I Archive

விகாஸ் தூபே என்கவுண்டர் செய்யப்பட்ட போது முதன் முறையாக பிராமணர் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி கருத்து தெரிவித்திருந்தது உள்ளிட்ட பல தகவல்கள் நமக்கு கிடைத்தன. இதன் மூலம் மாணவர்களால் தாக்குதலுக்கு ஆளான அந்த பெண் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: timesnownews.com I Archive 1 I theprint.in I Archive 2

பள்ளி நிர்வாகி தூண்டுதலின் பேரில் ஆசிரியை தாக்கப்பட்ட வீடியோவை தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியையை உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கினார்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நிர்வாகியுடன் ஏற்பட்ட தகராறில் ஆசிரியை தாக்கப்பட்டதும், அவர் உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதும் தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தாழ்த்தப்பட்ட ஆசிரியை மீது உயர் வகுப்பு மாணவர்கள் தாக்குதலா?- உண்மை அறிவோம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False