வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு இடையே மக்கள் தொழுகை செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஆற்று வெள்ளம் வேகமாகப் பாய்கிறது. அதன் அருகே உள்ள உள்ள கட்டிடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்கின்றர். நிலைத் தகவலில், "பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்கு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வங்கதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் திரிபுராவில் ஏற்பட்ட அதிகபட்ச மழை காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வங்கதேசத்தில் வெள்ளத்துக்கு நடுவே இஸ்லாமியர்கள் தொழுகை செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையில் வங்கதேச வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். முதலில் இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் தேடினோம்.

அப்போது, இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டதாகச் சமீப நாட்களாகப் பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட இதே வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால் அதில் வங்கதேசம் என்ற எந்த தகவலும் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: Facebook

தொடர்ந்து தேடிய போது பாகிஸ்தான் நாட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக சிலர் பதிவிட்டிருந்தனர். Bahrain Masjid Bilal SWAT Pakistan என்று குறிப்பிட்டு ஆகஸ்ட் 4ம் தேதி இந்த வீடியோவை சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர். இதன் அடிப்படையில் கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது பாகிஸ்தானில் இந்த மசூதியில் தொழுகை செய்யப்பட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிட்டிருந்தனர். இந்த மசூதியின் கூகுள் ஸ்ட்ரீட் புகைப்படம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அந்த பகுதியின் கூகுள் ஸ்ட்ரீட் புகைப்படம் கிடைக்கவில்லை.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாகிஸ்தான் வெள்ளத்தில் இந்த மசூதி பாதிக்கப்பட்டதாக செய்தி, வீடியோ கிடைத்தது. மேலும் மீண்டும் அந்த மசூதி கட்டப்பட்ட வீடியோக்களும் கிடைத்தன. இந்த வீடியோவில் உள்ள இடமும், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சிகளும் ஒன்றாக இருப்பதைக் காண முடிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ ஆகஸ்ட் 4, 2024 அன்று பாகிஸ்தானில் ஸ்வாட் நதி பகுதியில் எடுக்கப்பட்டதாக பலரும் சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த குறிப்பிட்ட நாளில் அல்லது அதற்கு முன்னதாக அங்கு பெருமழை, வெள்ளப்பெருக்கு ஏதும் ஏற்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம். பாகிஸ்தானில் குறிப்பாக ஸ்வாட் நதி பகுதியில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 1 வரையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் 108 பேர் உயிரிழந்தனர். அதிலும் ஜூலை 29, 30ம் தேதி மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது என்று செய்திகள் நமக்கு கிடைத்தன.

மேலும் வங்கதேசத்தில் வெள்ளம் என்பது ஆகஸ்ட் 21ம் தேதி ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டிருந்த பத்திரிகை செய்தியில் 21 ஆகஸ்ட் 2024 அன்று ஏற்பட்ட அதிகபட்ச திடீர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2023 ஆகஸ்ட் 4ம் தேதியிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. அதாவது வெள்ளம் ஏற்படுவதற்குக் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இவை எல்லாம் இந்த வீடியோ வங்கதேசத்தை சார்ந்தது இல்லை என்பதை உறுதி செய்கின்றது.

முடிவு:

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு சூழலில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் என்று 2024 ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியான வீடியோவை வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False