‘’ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையே இந்திய பொருளாதாரம் சரிவடைய காரணம் என்று உலக வங்கி அறிக்கை,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

ரூபாய் நோட்டு தடை, ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளதாக, உலக வங்கி அறிக்கை என்று மேற்கண்ட பதிவில் கூறியுள்ளனர். இதனையே சிலர் மீம்ஸ் போலவும் பகிர்ந்து வருகின்றனர்.

இதனை வாசகர்கள் உண்மையா என சந்தேகம் கேட்ட நிலையில், நாமும் இதுபற்றி ஆய்வு செய்ய தொடங்கினோம்.

உண்மை அறிவோம்:
2021ம் ஆண்டில் உலக வங்கி இப்படி ஏதேனும் அறிக்கையை வெளியிட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, 2021-22ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3% ஆக இருக்கும் என்று உலக வங்கி கூறியிருப்பதாக, செய்தி கிடைத்தது. எனவே, இதனை வைத்துப் பார்க்கும்போதே ‘இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு தடை காரணம்’ என உலக வங்கி அறிக்கை வெளியீடு என்று பகிரப்படும் மேற்கண்ட தகவல் தவறானது என தெரியவருகிறது.

The Hindu Link

இதைத்தொடர்ந்து, பண மதிப்பிழப்பு (ரூபாய் நோட்டு தடை) அமல்படுத்தப்பட்ட காலத்தில் உலக வங்கி எதுவும் அறிக்கை வெளியிட்டதா என விவரம் தேடினோம். இதன்படி, 2016ம் ஆண்டு இறுதியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation) இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. அந்த சூழலில், உலக வங்கி என்ன கூறியுள்ளது என்று பார்த்தபோது, 2017 ஜூனில் வெளியான அறிக்கை ஒன்றை கண்டோம்.

அதில், ரூபாய் நோட்டு தடை வரவேற்க வேண்டிய ஒன்று எனவும், குறிப்பிடத்தக்க பாதிப்பை இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ளது எனவும், உலக வங்கி குறிப்பிட்டுள்ளதாக, செய்திகளில் கூறியிருந்தனர்.

Hindustan Times Link

இதையடுத்து, 2018 ஏப்ரலில் ஜிஎஸ்டி மற்றும் ரூபாய் நோட்டு தடை போன்றவற்றில் இருந்து இந்திய பொருளாதாரம் மீட்சி பெற்றுள்ளதாக, உலக வங்கி குறிப்பிட்டதைக் கண்டோம்.

Scroll Link

இந்த அறிக்கையின்படி, ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு தடை ஆகியவை இந்திய பொருளாதாரத்தில் இடையூறு ஏற்படுத்தினாலும், அதனை கடந்து, பொருளாதாரம் மீட்சி பெற்றுள்ளதாக, தெரியவருகிறது.

மேலும், 2018 ஜூலையில் உலக வங்கி வெளியிட்ட மற்றொரு ஆய்வறிக்கையில், இந்தியாவின் சில மாவட்டங்களில் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தில், பெரும் தாக்கத்தை ரூபாய் நோட்டு தடை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, இந்தியா முழுக்க தாக்கம் என்று இதனை எடுத்துக் கொள்ள முடியாது; அமைப்பு சாரா தொழில்கள் அதிகம் நடைபெற்ற மாவட்டங்களிலேயே பெரிதும் தாக்கம் ஏற்பட்டது, எனவும் உலக வங்கி குறிப்பிட்டிருக்கிறது.

World Bank Group Report 2018 link

மற்ற ஊடகங்களிலும் இச்செய்தி வெளியாகியுள்ளது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

Scroll Link

அதேசமயம், ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு தடை போன்றவை இந்திய பொருளாதாரத்தில் இடையூறு ஏற்படுத்தியதை மறுக்க முடியாது; ஆனால், நிரந்தரமாக முடக்கியதாகக் கூறிவிட முடியாது.
Thefederal link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது,

1) 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பற்றி உலக வங்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ரூபாய் நோட்டு தடை (demonetise), ஜிஎஸ்டி போன்றவை இந்திய பொருளாதாரத்தை கணிசமான அளவே பாதித்திருக்கிறது; அவற்றில் இருந்து இந்திய பொருளாதாரம் மீட்சி பெற்றுவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

2) இதேபோல, 2021ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையிலேயே உள்ளது என்று, உலக வங்கி கூறியும் உள்ளது.

3) எனவே, 2017, 18ம் ஆண்டுகளில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையை முழுதாக படிக்காமல், ஒட்டுமொத்தமாக, இந்திய பொருளாதாரம் பாதித்துவிட்டது என்று கூறி, பழைய செய்தியை எடுத்து, 2021ம் ஆண்டில் மேற்கண்ட வகையில் மீம்ஸ் தயாரித்து பலரும் ஷேர் செய்வதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை- இந்திய பொருளாதாரம் பற்றி உலக வங்கி கூறியது என்ன?

Fact Check By: Pankaj Iyer

Result: Misleading