உரிமை காக்க மக்கள் போராட வேண்டும் என்று சந்திர சூட் அழைப்பு விடுத்தாரா?
மக்கள் தெருவில் இறங்கி ஒன்றிணைந்து போராடி அரசிடம் தங்கள் உரிமைகளைக் கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அழைப்பு விடுத்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் புகைப்படத்துடன் ஆங்கிலத்தில் பதிவு உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் நிலைத்தகவல் பகுதியில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், "நீதிபதி சந்திர சூட் வேண்டுகோள்.
இந்திய அரசியலமைப்பை, இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம், ஆனால் இதற்கு உங்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும், இந்த சர்வாதிகார அரசாங்கம். மக்களை பயமுறுத்துவார்கள், மிரட்டுவார்கள் ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள், அரசாங்கத்திடம் கணக்கு கேளுங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன்
- டி.ஒய்.சந்திர சூட் (தலைமை நீதிபதி)" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய அரசுக்கு எதிராக போராட இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே அழைப்பு விடுத்தது போன்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்படி கூறியிருந்தால் அது இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கும். ஆனால், எந்த ஒரு ஊடகத்திலும் அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
எனவே, உண்மையில் சந்திர சூட் அப்படி கூறினாரா என்று அறிய ஆய்வு செய்தோம். உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின் போது அப்படி ஏதும் கருத்து கூறினாரா, அது தொடர்பாக ஏதாவது செய்தி வெளியாகி உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளக் கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பத்திரிகை செய்தி என்று ஒரு பதிவு நமக்குக் கிடைத்தது. 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்த அந்த பத்திரிகை செய்தியில், "ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடும்படி மக்களுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகைப்படத்துடன் அவர் அழைப்பு விடுத்தது போன்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானதாகும். இப்படி வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய ஆய்வில் இந்த வதந்தி 2023ம் ஆண்டிலிருந்து பகிரப்பட்டு வருவதும் அதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட வரும்படி மக்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அழைப்பு விடுத்ததாகப் பரவும் பதிவு உண்மையில்லை. இது வெறும் வதந்தி என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டும், அவர்களுக்கு ஆதரவாக நான் இருப்பேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:உரிமை காக்க மக்கள் போராட வேண்டும் என்று சந்திர சூட் அழைப்பு விடுத்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False