திமுக மகளிரணியுடன் மகரஜோதி அன்று சபரிமலை செல்வேன் - கனிமொழி பெயரில் வதந்தி!
தி.மு.க மகளிரணியினருடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
தி.மு.க எம்.பி கனிமொழி புகைப்படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "தி.மு.க மகளிரணியுடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் - கனிமொழி பேச்சு" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நியூஸ் கார்டு 2019 ஜனவரி 7ம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Ganesan Bjp என்பவர் இந்து மதத்தைப் பற்றி அறிவோம். என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 நவம்பர் 8ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில் 2019 ஜனவரி 7 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான மகரஜோதி நிகழ்வு ஜனவரி 14ம் தேதி நடந்துள்ளது. அதாவது, மகரஜோதி நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கனிமொழி பேட்டி அளித்ததுபோல நியூஸ்கார்டு உள்ளது.2019ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி சர்ச்சைக்குரிய இந்த பேட்டியை கனிமொழி அளித்தாரா, சொன்னது போல சபரிமலைக்கு சென்றாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். கூகுளில் "சபரிமலை செல்வேன் கனிமொழி" என்று டைப் செய்து தேடினோம். ஆனால், கனிமொழி பேட்டி அளித்தது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இந்த நியூஸ்கார்டை அடிப்படையாகக் கொண்டு தீவிர வலதுசாரிகள் வெளியிட்ட பதிவுகள், அருவறுப்பான ஆய்வுகள் மட்டுமே கிடைத்தன.
Search Link |
நியூஸ் கார்டின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். இது நியூஸ்7 தமிழ் பயன்படுத்தும் தமிழ் ஃபாண்டுடன் ஒத்துப்போகவில்லை. அளவு, நிறம், வடிவமைப்பு என அனைத்திலும் வித்தியாசம் இருந்தது.
நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டு ஒன்றையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் நியூஸ் கார்டையும் fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம்.
அதில், நியூஸ்7 வெளியிட்ட நியூஸ் கார்டில் உள்ள லோகோ, பிக்நியூஸ் உள்ளிட்டவை மிகத் தெளிவாக உள்ளன. ஆனால், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் படத்தில் எதுவும் தெளிவின்றி அலசலாக இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் நியூஸ்7 நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில் கனிமொழி சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை, எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இது குறித்து கனிமொழி எம்.பி-யிடம் கேட்க அவரைத் தொடர்புகொண்டோம். இந்த விவரங்களை எல்லாம் கனிமொழியின் உதவியாளருக்கு அனுப்பி சரிபார்த்துத் தரும்படி கேட்டோம். நமக்கு பதில் அளித்த அவர், இந்த நியூஸ்கார்டு போலியானது என்று குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், "திமுக மகளிரணியுடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன்- கனிமொழி பேச்சு" என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:திமுக மகளிரணியுடன் மகரஜோதி அன்று சபரிமலை செல்வேன் - கனிமொழி பெயரில் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False