சிறுவன் ஒருவனை போலீஸ் தாக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

கருப்பு நிற சீருடை அணிந்த நபர் ஒருவர் மிகப்பெரிய தடியால் சிறுவன் ஒருவரைத் தாக்குகிறார். நிலைத் தகவலில், "உன் பிள்ளையை இப்படித்தான் அடிப்பாயா வெறி பிடித்த காக்கி மிருகமே" என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Abdul Rahman என்பவர் 2020 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பான பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் நடந்தது என்று நினைத்து பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த பதிவில் டெல்லியில் நடந்தது என்று குறிப்பிடவில்லை. "உன் பிள்ளையை இப்படித்தான் அடிப்பாயா?" என்று மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. டெல்லியில் கலவரம் பாதிப்பு நிகழ்ந்த சூழலில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளதால் பலரும் இது டெல்லி கலவரத்தின்போது எடுக்கப்பட்ட படம் என்ற வகையில் கருத்திட்டு வருகின்றனர்.

மோடி அரசாங்கத்தின் மோசமான செயல் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் இதை காணாமல் இருப்பது ஏன் என்றும் பலரும் பதிவிட்டு வருவதன் மூலம் இதை உறுதி செய்ய முடிகிறது. அதன் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

படத்தில் உள்ள போலீசின் சீருடையைப் பார்க்கும்போது அது இந்திய போலீஸ் போலத் தெரியவில்லை. சிறுவனைப் பார்த்தால் இந்தியன் போலவே தெரிகிறது. ஒருவேளை வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் என்று தெரிகிறது. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

Search Link

அப்போது பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. மேலும், 2011ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக சில ஊடக செய்திகள் கிடைத்தன. தொடர்ந்து தேடியபோது தி கார்டியன் இதழின் இணையதள பக்கத்தில் இந்த படம் 2010ம் ஆண்டு வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. அதில், தையல் நிறுவனம் ஒன்றில் ஊதியம் தொடர்பான போராட்டத்தில் வங்கதேச போலீசார் சிறுவர்களைத் தாக்கினர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

theguardian.comArchived Link

அந்த படத்தில் கெட்டி இமேஜ் என்று குறிப்பிடடிருப்பதால், கெட்டி இமேஜ் இணையதளத்தில் இந்த படம் உள்ளதா என்று தேடினோம். அப்போது, gettyimages.in இணையதளத்தில் இந்த புகைப்படம் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. தி கார்டியன் செய்தி வெளியிட்ட நாளும், gettyimages வெளியிட்ட குறிப்பில் உள்ள நாளும் ஒன்றாக இருந்தது. எனவே, இது 2010ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்தது என்பது உறுதியானது.

gettyimages.inArchived Link

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு முந்தைய படத்தை வைத்து தற்போது டெல்லியில் நடந்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயன்றது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கலவரத்தின் போது சிறுவனை அடிக்கும் போலீஸ்;– இது டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படமா?

Fact Check By: Chendur Pandian

Result: False