FactCheck: ஆக்சிஜன் தேவையா? பசுவிற்கு முத்தம் கொடுங்கள்- கங்கனா ரனாவத் பெயரில் பரவும் வதந்தி!
‘’ஆக்சிஜன் தேவை எனில், பசுவிற்கு முத்தம் கொடுங்கள் – கங்கனா ரனாவத் ட்வீட்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இந்த பதிவை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருவதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
நடிகை கங்கனா ரனாவத், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்கள் வழியே கருத்து கூறுவதும், அதற்குப் பலரும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமான நிகழ்வாகும். சமீபத்தில் கூட, அவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக, மகாராஷ்டிரா அரசுக்கும் (சிவசேனா), அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இத்தகைய சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, இந்திய அளவில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வரும் நிலையில், கங்கனா ரனாவத், நிறைய மரங்கள் வளர்த்தால், இந்த பிரச்னை சரியாகும் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடியாக, சிலர், ஆக்சிஜன் வேண்டுமெனில், பசுவிற்கு முத்தம் கொடுத்தால், பசு வெளியிடும் ஆக்சிஜனை நாம் பெற்றுக் கொள்ளலாம், என்று கூறி ட்வீட் வெளியிட்டதாகக் கூறி கங்கனா பெயரில் போலியான ட்வீட்டை தயாரித்து பகிர்ந்து வருகின்றனர்.
இதுபற்றி அவரும் கண்டனம் தெரிவித்து, மறுப்பு கூறி ட்வீட்டும் வெளியிட்டுள்ளார்.
தனக்கு எதிராகச் சிலர் பணம் செலவழித்து, இத்தகைய போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும் கங்கனா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தவிர, குறிப்பிட்ட புகைப்படத்தில் பசுவிற்கு முத்தம் தரும் நபர், குஜராத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த புகைப்படம், 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். விஜய் பர்ஸானா என்ற அந்த நபர், குடும்பத்தைப் பிரிந்து, பசுக்களுடன் ஒன்றாகச் சாப்பிடுவது, உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
பசுவின் சிறுநீர், சாணம் என அனைத்தையும் உணவாகப் பயன்படுத்தி, உடல்நலனை மேம்படுத்தி வருவதாகவும் அவர் ஊடகங்களில் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, இந்த புகைப்படத்திற்கும், தற்போதைய கோவிட் 19 சூழலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கங்கனா ரனாவத் பற்றி பரவி வரும் மேற்கண்ட ட்வீட் போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:ஆக்சிஜன் தேவையா? பசுவிற்கு முத்தம் கொடுங்கள்- கங்கனா ரனாவத் பெயரில் பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False