தொட்டபெட்டாவில் 4 குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி என்று பரவும் வீடியோ உண்மையா?

போலிச் செய்தி I Fake News

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் நான்கு குட்டிகளுடன் புலி ஒன்று சாலையைக் கடந்து சென்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook

சிறுத்தை ஒன்று தன்னுடைய குட்டிகளுடன் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தாயுடன் தொட்டபெட்டா சாலையைக் கடந்த 4 குட்டி புலிகள்: வைரல் வீடியோ …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சிறுத்தை குட்டிகள் புதருக்குள் இருந்து சாலைக்கு வந்து நடந்து செல்லும் வீடியோவை புலி தன்னுடைய குட்டிகளுடன் சாலையைக் கடந்து சென்றது என்று பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2024 செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த வீடியோவை இந்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், “செப்டம்பர் 5, 2024 அன்று ஹிமாச்சல பிரதேச மாநிலம்  மண்டி மாவட்டம் ஜோகிந்தர்நகருக்கு உட்பட்ட ஊர்லா வனச்சரகத்தின் வனத்துறை அதிகாரி சிவம் ரத்னா தலைமையில் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சிறுத்தை ஒன்று நான்கு குட்டிகளுடன் சாலைக்கு வந்தது. வனத்துறையினரின் வாகன முகப்பு விளக்கின் வெளிச்சம் கண்டு சிறுத்தையும் அதன் குட்டிகளும் பயந்தன. இருப்பினும் முன்னோக்கிச் சென்று சாலையிலிருந்து மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive 1 I tribuneindia.com I Archive 2

மேலும் இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சிவம் ரத்னா தன்னுடைய மொபைல் போனில் பதிவு செய்தார் என்றும் அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நியூஸ் 18 இந்தி வெளியிட்டிருந்த செய்தியில், இந்த வீடியோ ஹிமாச்சலபிரதேச மாநிலம் சம்பாவில் எடுக்கப்பட்டது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறனர். உண்மையில் இது மண்டி மாவட்டம் ஊர்லா பகுதியில் எடுக்கப்பட்டது என்று ஜோகிந்தர்நகர் டி.எஃப்.ஓ கமல்பாரதி உறுதி செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக எந்த பதிவும் நமக்குக் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழுவும் இந்த வீடியோ தொட்டபெட்டாவில் எடுக்கப்பட்டது இல்லை என்று உறுதி செய்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தொட்டபெட்டாவில் சிறுத்தை தன்னுடைய குட்டியுடன் நடமாடுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஹிமாச்சலபிரதேசத்தில் சிறுத்தை தன் குட்டிகளுடன் சாலையை கடந்த வீடியோவை தமிழ்நாட்டின் தொட்டபெட்டாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:தொட்டபெட்டாவில் 4 குட்டிகளுடன் சாலையைக் கடந்த புலி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False