இஸ்ரேல் போர்க் குற்றம் இழைப்பதாக பாலஸ்தீனியர்கள் போலியாகக் குற்றம் சாட்டுகின்றனர், உலக மக்களை ஏமாற்ற பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தது போல நடிக்க வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட உயிரிழந்த உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இஸ்ரேல் போர்க்குற்றம் இழைப்பதாக பாலஸ்தீன காசா பயங்கரவாதிகள் கூறுகின்றனர்

காசா பாலஸ்தீன பயங்கரவாதிகள் பொய் நாடகம் ஆடி உலகை முட்டாளாக்க முயல்கின்றனர் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் எப்படி செயல்பட்டு சர்வதேச மக்களை ஏமாற்றுகிறார்கள் உலக மக்கள் மத்தியில் தங்களுக்கு ஆதரவைப் பெறுவதற்காக போலியாக இறந்தவர்கள் போல் நடித்து ஊடகங்களுக்கு வீடியோ புகைப்படங்கள் கொடுக்கப்படுகின்றன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது 2023 நவம்பர் 6ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

உலக மக்களை ஏமாற்ற, தாங்கள் பாதிக்கப்படுவது போன்று பாலஸ்தீன மக்கள் போலியான வீடியோவை வௌியிடுவதாக குறிப்பிட்டு இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவை பார்க்கும் போது போரில் இறந்த உடல்களை வரிசையாக அடுக்கி வைத்தது போல இல்லை, போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ போல உள்ளது. இதே போன்று ரஷ்யா - உக்ரைன் போரின் போதும் ஒரு வீடியோ வைரல் ஆனது. எனவே, இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

இந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

அந்த வீடியோ பதிவில் அரபு மொழியில் விவரமும் இடம் பெற்றிருந்தது. அதை மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கும் இஸ்ரேல் - பாலஸ்தீன போருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2013ம் ஆண்டு எகிப்தில் போலீஸ் மற்றும் ராணுவத்தை கண்டித்து பல்கலைக் கழக மாணவர்கள் இறந்தவர்கள் போல படுத்து போராட்டம் நடத்திய போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் தாக்குதலில் தாங்கள் பாதிக்கப்பட்டதாக பாலஸ்தீனியர்கள் போலியாக வீடியோவை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர் என்ற பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக உலக நாடுகளை நம்ப வைக்க போலியான வீடியோவை எடுத்த பாலஸ்தீனம் என்று பரவும் வீடியோ 10 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் நடந்த போராட்டம் ஒன்றின் வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவிகள் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் நாடகமாடியதா?

Written By: Chendur Pandian

Result: False