7 மாவட்டங்களுக்குப் பேருந்து சேவை நிறுத்தம் என்று பரவும் தகவல் உண்மையா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சத்யம் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நிறுத்தம். நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் (நவம்பர் 26, 2024) டெல்டா மாவட்டம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், செங்கல்பட்டு  மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த நியூஸ் கார்டில் தேதி இல்லை. நாளை மதியம் என்று இருக்கிறது, இந்த நியூஸ் கார்டை நவம்பர் 25ம் தேதியில் தொடங்கி, 26ம் தேதியும் கூட பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

நியூஸ் கார்டில் உள்ள தகவலை அப்படியே டைப் செய்து, ஃபேஸ்புக்கில் தேடிப் பார்த்தோம். அப்போது, 2020ம் ஆண்டில் இருந்து இந்த நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இந்த நியூஸ் கார்டை சத்யம் டிவி 2020ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Archive

சத்யம் டிவி மட்டுமின்றி பல ஊடகங்களிலும் அப்போது அந்த செய்தி வெளியாகி இருந்தது. நிவர் புயல் கரையைக் கடக்கும் என்பதால் பேருந்து சேவை தடை செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. 2020ம் ஆண்டு நிவர் புயலின் போது வெளியான அறிவிப்பை 2024ல் கன மழை நேரத்தில் பலரும் பகிர்ந்திருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சத்யம் டிவி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டில் தேதியை அகற்றிவிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதன் மூலம் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மழை காரணமாக ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம் என்று 2020ம் ஆண்டு நிவர் புயலின் போது வெளியான நியூஸ் கார்டை இப்போது வெளியானது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:7 மாவட்டங்களுக்குப் பேருந்து சேவை நிறுத்தம் என்று பரவும் தகவல் உண்மையா?

Written By: Chendur Pandian  

Result: False