ராமர் கோயில் கட்ட விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை: அமித் ஷா பேசியதன் விவரம் என்ன?
‘’எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே,’’ என்ற தலைப்பில் ஒரு மீம் பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. உண்மை என நம்பி வைரலாகப் பகிரப்பட்டு வரும் இந்த பதிவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
மார்ச் 21ம் தேதி இந்த ஃபேஸ்புக் பதிவை, Vasanth Kumar என்பவர் வெளியிட்டுள்ளார். இதில், மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே…!!! ராமர் கோவில் கட்ட விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது – அமித் ஷா. மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருந்தும், காங்கிரஸ் காரணமா…? முட்டாள் பக்தாள்ஸ் இருக்கும் வரை உங்க காட்டுல மழை தான்டா..!,’’ என எழுதி, மீம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த மீம், Fb/Troll Mafia என்ற ஃபேஸ்புக் ஐடியின் பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை, இதுவரை 9,500க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் சொல்லியிருப்பது போல பாஜக தேசிய தலைவர் அமித் ஷா எங்கேயும் பேசியுள்ளாரா, என கூகுளில் தேடிப் பார்த்தோம். இதன்படி, அமித் ஷா ராமர் கோயில் பற்றி பேசியதற்கான செய்தி ஆதாரம் கிடைத்தது.
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தி ஆதாரத்தை கிளிக் செய்து பார்த்தபோது, கடந்த ஜனவரி 11, 2019 அன்று, அமித் ஷா, ராமர் கோயில் பற்றி பேசியுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. நாம் ஆய்வு செய்யும் மீமில் உள்ளது போலவே, ‘’ராமர் கோயிலை விரைவில் கட்ட விடாமல் காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டு வருகிறது,’’ என்றுதான் அமித் ஷா பேசியுள்ளார். இது உண்மைதான். ஆனால், அவர் பேசிய இடம் எங்கே என்று பார்த்தால், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம் என தகவல் கிடைத்தது.
நாம் ஆய்வும் செய்யும் மீமில், அவர் எதோ உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி முன்னிலையில் பேசியதுபோல குறிப்பிட்டிருந்தனர். இதுபற்றிய செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதையடுத்து, மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத் ஒன்றாக இருக்கும் அந்த புகைப்படம் எங்கே எப்போது எடுக்கப்பட்டது என விவரம் தேடினோம். அப்போது, மேற்கண்ட மீமில் இருக்கும் புகைப்படம், கடந்த 2017, மார்ச் 19ம் தேதியன்று நடைபெற்ற யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் பதவியேற்பு விழாவின்போது எடுக்கப்பட்ட ஒன்று என, தெரியவந்தது.
இதுபற்றிய செய்தி ஆதாரம் காண இங்கே கிளிக் செய்யவும்.
இதன்படி, அமித் ஷா பேசியது உண்மைதான். ஆனால், அவர் அதனை யோகி ஆதித்யநாத், மோடி முன்னிலையில் பேசவில்லை. இவர்கள் 3 பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வேறு ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என தெளிவாகிறது. அமித் ஷா பேசிய செய்தியை எடுத்து, தங்களின் சுய அரசியல் தேவைக்காக பயன்படுத்தியுள்ளனர். எனவே, நாம் ஆய்வு செய்யும் மீமில் உள்ளதில், அமித் ஷா பேசியது மட்டுமே உண்மை, மற்ற அனைத்தும் தவறான தகவல் என சந்தேகமின்றி, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு, பாதி உண்மை, பாதி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான புகைப்படம், செய்தி மற்றும் வீடியோவை, மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Title:ராமர் கோயில் கட்ட விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை: அமித் ஷா பேசியதன் விவரம் என்ன?
Fact Check By: Parthiban SResult: Mixture