
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காவிட்டால், நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கதிர் என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “RSS சார்பில் அம்மண போராட்டம் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தராவிட்டால், அகோரி மணிகண்டனை அழைத்து எனது தலைமையில் வடகோவை பாலத்தின் மேல் பாஜகவினர் அனைவரும் நிர்வாண போராட்டம் நடத்துவோம் – பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Sikkandar Fayaz என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 30ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த அனுமதி தர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு காரணங்கள் காரணமாகத் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 6ம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் அனுமதி அளிக்காவிட்டால் நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க சார்பில் அதன் மாநிலச் செயலாளர் சூர்யா அறிவித்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றன.
நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், டிசைன் போன்றவை இது வழக்கமாக அந்த ஊடகம் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. மேலும், போராட ஆயிரம் வழிகள் இருக்கும் போது நிர்வாண போராட்டத்தை அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. விஷமத்தனமாக யாராவது இதைப் போலியாக உருவாக்கியிருக்கலாம் என்று தெரிந்தது.
இதை உறுதி செய்துகொள்ள கதிர் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்டிருந்தனர். இது குறித்து எஸ்.ஜி.சூர்யாவிடம் கேட்ட போதும் அவரும் இது விஷமத்தனமான, தவறான பதிவு என்று நம்மிடம் தெரிவித்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.ஜி.சூர்யா கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில செயலாளர் சூர்யா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்காவிட்டால் நிர்வாண போராட்டம் நடத்துவோம் என்று பாஜக அறிவித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
