வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தாயால் கைவிடப்பட்ட குரங்கு குட்டிகள் இரண்டு சகதியில் அவதியுறுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "வயநாடு பேரிடரில்..... இந்த தாயுள்ளம் நெஞ்சம் கனக்கிறது...வயநாடும் ஒரு வெளிநாடு தான் என்று நமது பிரதமரிடம் சொல்லுங்கள் அப்பொழுதாவது பழக்க தோசத்தில் புரப்பட்டு வந்து விடுவார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 30, 2024 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மனிதர்கள் மட்டுமின்றி காட்டு விலங்குகளும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. இந்த சூழலில் பிரதமர் மோடி அங்கு செல்லாததை விமர்சித்து வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த குரங்குகள் வீடியோ வயநாட்டில் எங்கு எடுக்கப்பட்டது, அதன் பின்னணி என்ன என்று அறிய, இது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று அறிய தேடிப் பார்த்தோம். நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இந்த குரங்குகள் வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். ஆகஸ்ட் 2024 முதல் வாரத்தில் பலரும் இந்த வீடியோவை வயநாட்டில் எடுக்கப்பட்டது என்று பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஆனால், எந்த ஒரு செய்தி ஊடகங்களிலும் இந்த வீடியோ தொடர்பாக எந்த தகவலும் இல்லை.

எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவர்களும் "இந்த குரங்குகள் வீடியோ வயநாட்டில் எடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று கண்டறிய முடியவில்லை. அதே நேரத்தில் வயநாடு நிலச்சரிவு சம்பவம் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிக்டாக் சமூக ஊடகத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டதைக் கண்டறிந்தோம். இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேபாளத்திலிருந்து இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது" என்றனர். இது தொடர்பாக மலையாளம் ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

உண்மைப் பதிவைக் காண: tiktok.com I Archive

டிக்டாக் இணைய இணைப்பை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கைத் தமிழ் பிரிவுக்கு அனுப்பி, அதில் உள்ள தேதி மற்றும் தகவலை தரும்படி கேட்டோம். அவர்களும் இந்த வீடியோ பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி ஜூலை 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தனர். வயநாடு நிலச்சரிவு 2024 ஜூலை 30ம் தேதி நடந்தது. அதற்கு முன்பாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட குரங்கு குட்டிகள் வீடியோவுக்கும் வயநாடு நிலச்சரிவு துயர சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.

முடிவு:

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டிகள் என்று பரவும் வீடியோ நிலச்சரிவு ஏற்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட குரங்குகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Misleading