
சாலையின் நடுவே அமர்ந்திருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை ஆபத்துக்களிலிருந்து மயில் ஒன்று காப்பாற்றியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
குழந்தை ஒன்று சாலையின் நடுவே அமர்ந்திருப்பது போலவும், வாகனங்கள் மோதாமல் காப்பாற்றி, குழந்தை சாலையைக் கடக்க மயில் ஒன்று உதவுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பின்னணியில் முருகன் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “நடுரோட்டில் குழந்தை இருப்பதைப் பார்த்து குழந்தையை பாதுகாத்து பத்திரமாக ஓரத்தில் கொண்டு சேர்க்கும் மயில்🦚 வியக்க வைக்கும் அதிசியம் 👍 மயில் வாகனனே போற்றி ஓம் முருகா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சாலையின் நடுவே குழந்தை இருப்பது போலவும் அந்த குழந்தையைக் கடவுள் மயிலாக வந்து காப்பாற்றியது போலவும் சிலாகித்து வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கும் போதே இது உண்மையானது இல்லை, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. ஆனாலும் இதையும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
பச்சிளம் குழந்தையை இப்படி நடு ரோட்டில் யாரும் விடுவார்களா, அப்படியே குழந்தை சாலைக்கு வந்தால் அதைக் கண்டும் காணாமல் மக்கள் செல்வார்களா என்று ஏராளமான கேள்விகளை இந்த வீடியோ எழுப்புகிறது. மேலும், வீடியோவின் பல பகுதிகள் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்து கொண்டே இருந்தன.
குறிப்பாக குழந்தை சாக்ஸ் எனப்படும் காலுறை அணிந்திருப்பது போன்று காட்சி உள்ளது. சில விநாடிகளில் குழந்தை வெறும் காலுடன் இருப்பது போன்று காட்சி வருகிறது.
கார் ஒன்று வரும் போது மயில் குழந்தையைக் காக்கும் வகையில் காரை நோக்கித் திரும்புகிறது. திடீரென்று மயில் தோகையை விரிக்கிறது. காரை பார்த்து தோகையை விரிக்கும் மயிலின் தலைப் பகுதி தோகை விரித்த பின்னர் குழந்தை பக்கம் திரும்பிவிடுகிறது.
மயிலின் கொண்டை பகுதியானது குழந்தை சாலையைக் கடக்கும் போது, குழந்தையின் தலைக்கு வருகிறது. சில விநாடிகள் குழந்தைக்கும் மயிலுக்கு இருப்பது போன்று கொண்டை ஏற்பட்டு மறைகிறது. இப்படிப் பல காட்சிகள் இது ஏஐ வீடியோ என்பதை உறுதி செய்கின்றன.
Deepfakes Analysis Unit வாட்ஸ்ஆப் பிரிவை தொடர்கொண்டு, வீடியோ காட்சிகளை அனுப்பி, சந்தேகம் கேட்டோம். அவர்களும், இந்த காட்சிகள் எல்லாம் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்று அலசி ஆராய்ந்து முடிவை அறிவித்தனர். இதன் மூலம் இந்த வீடியோ உண்மையானது இல்லை… ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
முடிவு:
குழந்தையைக் காப்பாற்றிய மயில் என்று பரவும் வீடியோ உண்மையானது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:சாலையில் தனியாக கிடந்த குழந்தையை காப்பாற்றிய மயில் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: Altered
