
டெல்லியில் வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு அலைந்த சதிகார பயங்கரவாத அமைப்பின் தலைவன் கைது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு ஒருவர் நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “N.I.A வால் டெல்லியில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீங்களும் நானும் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, தோவல் ஜி தெருக்களிலும் சுற்றுப்புறங்களிலும் இலக்கின்றி சுற்றித் திரியவில்லை. டெல்லி மற்றும் உ.பி. போலீசாரின் உதவியுடன் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) நேற்று இரவு டெல்லியில் உள்ள சீலம்பூர் மற்றும் உ.பி.யில் உள்ள அம்ரோஹாவில் சோதனை நடத்தி 16 பேரை கைது செய்தது… கீழே புகைப்படத்தில் சதிகார பயங்கரவாத அமைப்பின் கும்பலின் தலைவன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய மக்கள் நாம் எல்லாம் நிம்மதியாக தூங்க, தெசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லி தெருக்களில் சுற்றித் திரிந்து, பயங்கரவாதிகளைக் கைது செய்துள்ளார் என்றும், உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு இருந்த பயங்கரவாத கூட்டத்தின் தலைவனையும் கைது செய்துள்ளார் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை நேரடியாக பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளனர்.
டெல்லிக்குள்ளேயே பயங்கரவாதிகள் வந்துவிட்டார்கள் என்றால் எந்த அளவுக்கு நம்முடைய நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்பது கூட புரியாமல் ஒரு தரப்பினருக்கு எதிராக வன்முறை, விஷம கருத்தை பகிர்ந்துள்ளனர்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள எல்லா கருத்துக்கள் தொடர்பாகவும் நாம் ஆய்வு செய்யவில்லை. உடலில் வெடிமருந்து கட்டிக்கொண்டு தற்கொலை தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் சுற்றித் திரிந்த நபரை அஜித் தோவல் கைது செய்துள்ளார் என்று பரவும் புகைப்படம் உண்மையா என்று மட்டும் ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது டெல்லியில் சிக்கிய பயங்கரவாதி என்று என்று சமீப காலமாக பலரும் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: blogspot.com I Archive
தேடல் முடிவுகளின் பிற்பகுதியைப் பார்க்கும் போது 2010ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதுவும் நையாண்டிப் பதிவாக 2015ம் ஆண்டில் இந்த புகைப்படத்தைப் பலரும் பதிவிட்டிருந்தனர். 2010ம் ஆண்டு பெர்ஷிய மொழியில் வெளியான செய்தி ஒன்றில் இந்த புகைப்படம் இருந்தது. அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.
அதில், “ஃபரா மாகாணத்தில் தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்டிருந்த ஒருவரைக் கைது செய்ததாக ஆப்கானிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் அறிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஃபரா என்பது ஆப்கானிஸ்தானில் மேற்குப் பகுதியில் உள்ள மாகாணம் ஆகும். 2010 காலகட்டத்தில் தாலிபான்கள் அந்த பகுதியில் அதிக அளவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி வந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: mehrnews.com I Archive
நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படம் 2010ம் ஆண்டிலிருந்து செய்தி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் தாலிபான் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்று 2010ம் ஆண்டு வெளியான செய்தி கூறுகிறது. இதன் மூலம் டெல்லியில் அஜித் தோவால் மற்றும் என்ஐஏ கைது செய்த பயங்கரவாதிகளின் தலைவன் இவன் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
டெல்லியில் என்ஐஏ கைது செய்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் உடல் முழுக்க வெடிகுண்டுகளை கட்டியிருந்த காட்சி என்று பரவும் புகைப்படத்தில் இருப்பவன் 2010ம் ஆண்டு ஆப்கானிஸ்தாலில் தற்கொலை தாக்குதல் நடத்தவந்த தாலிபான் அமைப்பைச் சார்ந்தவன் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:டெல்லியில் என்ஐஏ கைது செய்த நபரின் உடல் முழுக்க வெடிகுண்டுகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
