
கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தை காவல் துறையை விட்டு உத்தரப்பிரதேச பாஜக அரசு தாக்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உத்தரகண்ட் மாநிலம் ஜோதிர் ( அல்லது ஜோஷி) சங்கர மடத்தின் தலைவராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இவரை போலீசார் தாக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் அவர்களை காவல்துறையை ஏவிவிட்டு மரண அடி அடித்துள்ளது ஆளும் பாஜக அரசு.. உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சங்கராச்சாரியார் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பம் முதலே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கள்ளத்தனமாக இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எதிராகச் செய்துவரும் அட்டூழியங்களை சுட்டிக்காட்டி வந்தார் சுவாமிகள்…!
இதனால் பலமுறை அவரைக் கொலை செய்ய முயற்சித்தது கேடுகெட்ட RSS மற்றும் மதவெறிபிடித்த பிஜேபி. இந்த மானங்கெட்ட RSS பிஜேபி மிருக்கங்களால் இப்பொழுது சங்கராச்சாரியாரின் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டது…! சமீபத்தில் பாஜக அரசு எப்படி தாழ்த்தப்பட்டவர்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் வஞ்சிக்கிறது என்பதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி இருந்தார்…! மேலும் கங்கை நதி தூய்மைப்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆளும் பாஜக அரசு எப்படி திருடியது என்பதையும். கங்கை நதியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் நகர கழிவுகள் எப்படி சேர்க்கப்படுகிறது அதற்கு ஆளும் பாஜக அரசு எப்படி கமிஷன் வாங்குகிறது என்பதையும் ஆதாரங்களுடன் பேசியிருந்தார்.
இந்த நிலையில் கும்பமேளாவிற்கு சுவாமிகள் பக்தகோடிகளுடன் சென்ற பொழுது இவர்களை மட்டும் தடுத்த காவல்துறை அதிரடிப்படையினர் சாமியாரோடு வந்தவர்கள் அனைவரையும் மரணஅடி அடித்து கொலைவெறியோடு தாக்குதல் நடத்தியது. இதில் அனந்த சுவாமிகள் நின்ற இடத்தில் இருந்து நகர மறுக்கவே அவரை மேலும் 6 காவலர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினார்கள். இதில் மண்டை உடைந்து முகம் காயமடைந்து கை கால்களில் ரத்தப்போக்கு ஏற்பட்டும் அளவுக்கு நிலைமை மோசமானது. தற்பொழுது சுவாமிகல் அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் காணொளிகளில் அதிவேகமாக பரவி வருகிறது..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பிரயாக்ராஜ் மகா கும்ப மேளாவில் நீராட வந்த ஜோதிர் அல்லது ஜோஷி மட சங்கராச்சாரியர் அவிமுக்தேஷ்வரானந்த் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சமீபத்தில் அவிமுக்தேஷ்வரானந்தா தாக்கப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
யூடியூபில் அவிமுக்தேஷ்வரானந்தா மீது போலீஸ் தாக்குதல் என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுத் தேடினோம். அப்போது, 2015ம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்று கிடைத்தது. அதைப் பார்த்த போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சி அதிலும் இருந்தது. இதன் மூலம் 2015ல் நடந்த சம்பவத்தின் வீடியோவை 2025ல் கும்பமேளாவுடன் தொடர்புப்படுத்தி தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.
2015ம் ஆண்டு வாரணாசியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையை கங்கை ஆற்றில் கரைக்க சென்ற போது போலீஸ் தடுத்ததாகவும் தெரியவந்தது. கங்கை ஆற்றில் விநாயகர் சிலைகளைக் கரைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த சூழலில், தடையை மீறி சிலையை கரைக்க சென்ற சாமியார்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி விரட்டினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் காயமுற்றார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2015ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக அகிலேஷ் யாதவ் இருந்தார். 2017ம் ஆண்டு மார்ச் 19ம் தேதிதான் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆனார். இதன் மூலம் உ.பி பாஜக அரசு காவல்துறையை ஏவி சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த்தை தாக்கியது என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
கும்பமேளாவில் நீராட வந்த ஜோதிர்மட சங்கராச்சாரியாரை உ.பி பாஜக அரசு போலீசை விட்டு தாக்கியது என்று பரவும் வீடியோ 2015ம் ஆண்டு அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்தில் நடந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கும்பமேளாவில் ஜோதிர் மட சங்கராச்சாரியாரை தாக்கிய உ.பி பாஜக அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
