மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடம் இடிந்து விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "மொராக்கோ பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை இந்திய தேசிய இராணுவம் Indian National Army என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 செப்டம்பர் 9ம் தேதி பதிவிட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்திருந்தனர்.

உண்மை அறிவோம்:

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக பல படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் ஒரே ஒரு கட்டிடம் மட்டும் இடிந்து விழுகிறது. மற்ற கட்டிடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டது போல இல்லை. எனவே, இது பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி பல்வேறு புகைப்படங்கள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2020ம் ஆண்டில் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. 2020ல் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதன் மூலம் 2023 மொரோக்கோ நிலநடுக்கத்துடன் இதற்குத் தொடர்பில்லை என்பது உறுதியானது.

இந்த வீடியோ தொடர்பாக தொடர்ந்து தேடினோம். இந்த சம்பவம் பற்றிக் குறிப்பு இல்லாமல் இரவில் ஆழ்ந்த தூக்கத்தில் நடந்த சம்பவம் என்பது போன்று பலரும் பதிவிட்டிருந்தனர். சில வீடியோக்களின் மீது Casablanca (காசாபிளாங்கா) என்று எழுதப்பட்டிருந்தது. அது என்ன என்று கூகுள் செய்து பார்த்த போது மொரோக்கோ நாட்டின் நகர் என்பது தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: alnas.fr I Archive

இதன் அடிப்படையில் கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது alnas.fr என்ற பிரெஞ்சு மொழி இணையதளத்தில் நாம் ஆய்வுக்கு வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. 2020 ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து படித்துப் பார்த்தோம். அதில், காசாபிளாங்கா நகரில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் 2020ம் ஆண்டு நடந்த அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்த வீடியோவை மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடு இடிந்தது என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2020ல் மொரோக்கோவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த வீடியோவை 2023 நிலநடுக்கத்தின் காட்சி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மொரோக்கோ நிலநடுக்கத்தில் இடிந்து விழும் கட்டிடம் என்றும் பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False