மும்பையில் கனமழை பெய்து வரும் சூழலில், கேட்வே ஆஃப் இந்தியா (The Gateway of India) அருகே கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு அருகே கடல் கொந்தளிப்பாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை தாஜ் கேட்வே அருகில் கொந்தளிக்கும் அரபி கடல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மும்பையில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் சூழலில், மும்பையில் வெள்ள பாதிப்பு என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மும்பை விமானநிலையம் கடல் போல மழை நீர் தேங்கி நிற்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அது 2023ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த சூழலில், மும்பை தாஜ் ஹோட்டல் – கேட்வே ஆஃப் இந்தியா அருகே கடல் கொந்தளிப்பாக உள்ளது என்று பலரும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பார்க்கும் போது அது மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகில் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெளிவாக இல்லை. இதனால், தற்போது பெய்து வரும் கன மழை மற்றும் வானிலை காரணமாக கடல் சீற்றமாக இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை சமீப நாட்களாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் கூட இதே வீடியோவை சிலர் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
தொடர்ந்து தேடியபோது 2021ம் ஆண்டு Tauktae புயல் காரணமாக மும்பை தாஜ் ஹோட்டல் – கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் கடல் சீற்றத்துடன் இருந்ததாக செய்திகள் நமக்கு கிடைத்தன. அத்துடன் கடல் சீற்றம் காரணமாக கரையோர பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாக வௌியான வீடியோ செய்தியும் நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2021ம் ஆண்டைச் சார்ந்தது என்பதை உறுதி செய்தன.
நம்முடைய ஆய்வில் 2021ம் ஆண்டு மும்பை கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவை 2025ல் மும்பையில் கடல் சீற்றம் என்று இப்போது நடப்பது போன்று தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடியது அல்லது எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற தகவலை மறைத்து வெளியிடப்படப் பதிவு என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மும்பையில் கன மழை பெய்து வரும் சூழலில் கேட்வே ஆஃப் இந்தியா அருகே கடல் கொந்தளிப்பாக இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ 2021ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே கொந்தளிக்கும் கடல் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Misleading
