கேரளா வயநாடு நிவாரணப் பணிக்கு ரூ.35 கோடி வழங்கிய அஜித் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிக்கு ரூ.36 கோடி நிதி உதவி அறிவித்த அஜித் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "அள்ளிக் கொடுத்த தல. கேரள வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு தல அஜீத் சார்பில் ரூ.35 கோடி நிதியுதவி அறிவிப்பு. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நிதியுதவி அறிவிப்பு; மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் - அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு" என்று இருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு நடிகர் அஜித் தரப்பில் இருந்து ரூ.35 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியானதாக செய்தி எதுவும் இல்லை. மேலும், இந்த நியூஸ் கார்டும் உண்மையானது போல இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் சுரேஷ் சந்திரா இப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என்று அறிய அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தை பார்த்தோம். படம் தொடர்பான அறிவிப்புகள் இருந்தன. ஆனால், வயநாட்டுக்கு நிதி உதவி அளித்ததாக எந்த தகவலும் இல்லை.
உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive
அடுத்ததாக நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். அந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே போலியானது என்று தெரிவதால் நேரடியாக, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி வைத்தோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், புதிய தலைமுறையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு வெளியான பதிவையும் நமக்கு அனுப்பினார்.
இதேபோன்று அஜித் தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வயநாட்டுக்கு ரூ.35 கோடி வழங்கிய நடிகர் அஜித் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வயநாடு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நடிகர் அஜித் ரூ.35 கோடி வழங்கினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:கேரளா வயநாடு நிவாரணப் பணிக்கு ரூ.35 கோடி வழங்கிய அஜித் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Written By: Chendur PandianResult: False