
சீனாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் வானத்தில் லேசர் அல்லது ட்ரோன் மூலம் ஒளி-ஒலி காட்சி நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமோக வரவேற்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில ஆண்டுகளுக்கு முன்பு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தது. தற்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தகம் தொடர்பான பிரச்னை எழுந்துள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் சீனா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.
சீனாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை வைத்து பாஜக ஆதரவாளர்கள் பல்வேறு பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் லேசர் ஷோ நடத்தப்பட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. மோடியின் சீனா பயணம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தது. அதில் கூட நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு இல்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற ஆனால் மோடியின் படம் இல்லாத படம் ஒன்று 2025 ஏப்ரல் 20ம் தேதி செய்தி ஊடகம் ஒன்றில் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. அதில், சீனாவின் சோங்கிங்கில் (Chongqing) ட்ரோன் மூலம் ஒளி – ஒலி காட்சி நடத்தப்பட்டது. அந்த ஊரில் ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும் இந்த ட்ரோன் ஒளி – ஒலி காட்சி 15 நிமிடங்களுக்கு நடத்தப்படுவது வழக்கமான ஒன்று என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I news.cn I Archive
இந்த ட்ரோன் ஒளி- ஒலி நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளும் கூட நமக்குக் கிடைத்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் அந்த இடத்தில் ஒளி-ஒலி காட்சி நடத்தப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியுடன் பயணித்த ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூட அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை.

மோடியை வரவேற்கும் வகையில் சீனாவில் ட்ரோன் ஒளி-ஒலி காட்சியை நடத்தியிருந்தால் மோடியின் படத்தை மட்டும் தனியாக வைத்து செய்திருக்கலாம். ஆனால், ஏற்கனவே உள்ள ஒரு காட்சியில் கூடுதலாக மோடியின் படத்தை வைத்துள்ளனர். பார்க்கும் போதே இது கூடுதலாக எடிட் செய்து வைத்திருப்பது தெரிகிறது. இதே போன்று மோடியை விமர்சிக்கும் வகையில் ஒளி-ஒலி காட்சி நடத்தப்பட்டதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்களும் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டிருந்ததையும் நம்முடைய தேடலில் காண முடிந்தது. இவை எல்லாம் இந்த புகைப்படம் உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
சீனாவில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் ட்ரோன் காட்சி நடத்தப்பட்டது என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:சீனாவில் மோடியை வரவேற்று ட்ரோன் ஷோ நடத்தப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Altered
