‘பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது’ என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று அண்ணாமலை கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் நியூஸ் தமிழ் என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது; சட்டமன்றத்தில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கும் – அண்ணாமலை” என்று இருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2024 தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் முடிவடையும். இந்த நடைமுறையை மாற்றி தொடக்கத்திலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மையில் அண்ணாமலை அப்படி கூறியிருந்தால் எல்லா ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. வேறு எங்காவது அப்படி கூறினாரா என்று உறுதி செய்ய பாஜக மூத்த நிர்வாகி ஒருவருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி வைத்தோம். அவரும் இது போலியானது என்று நமக்கு பதில் அளித்தார்.

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போது போலியானது என்று தெரிகிறது. இருப்பினும் இதை உறுதி செய்துகொள்ள இந்த நியூஸ் கார்டை நியூஸ் தமிழ் என்ற ஊடகம் வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் மீது “FAKE NEWS” என்று முத்திரையுடன் “இந்த செய்தியை நியூஸ் தமிழ் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தனர். 

Archive

தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது, என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக எந்த செய்தியும் இல்லை. அப்படி அவர் கூறவில்லை என்று பாஜக நிர்வாகி ஒருவர் நம்மிடம் உறுதி செய்துள்ளார். இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நியூஸ் தமிழ் ஊடகமும் உறுதி செய்துள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது என அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது’ என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian 

Result: False