தமிழ்நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

பிச்சைக்காரர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது என்பதை தமிழ் நாட்டினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஏபிபி நாடு ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வைத்து ஃபேஸ்புக்கில் புகைப்பட பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “Beggars cannot be choosers” என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. இதை உதயநிதி மற்றும் தமிழ் நாட்டினர் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டின் மீது “இதை நண்பர்களிடம் ஓசி சோறு வாங்கி சாப்பிடும் நீ சொல்லலாமா ஆருத்ரா ஆடு மலை. நீ தாண்டா Beggar” என்று குறிப்பிடப்பட்டிருந்து. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவானது 2023 டிசம்பர் 26ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், இது அவ்வளவு பெரிய பாதிப்பு இல்லை என்பது போல பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதை வைத்து இரு தரப்பினருக்கும் இடையே சமூக ஊடகங்களில் வார்த்தை போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில் “பிச்சை எடுப்பவர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது” என்று ஆங்கில பழமொழி ஒன்றை அண்ணாமலை கூறியதாக சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அவர் அப்படி பேசியதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, இது போலியான நியூஸ் கார்டாக இருக்கலாம் என்று தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.

முதலில், இந்த நியூஸ் கார்டை ஏபிபி நாடு ஊடகம் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், டிசம்பர் 25, 2023 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போலவே அண்ணாமலை புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு வெளியாகி இருப்பது தெரிந்தது. 

அதில், “திமுக அரசு வேண்டுமென்றே மத்திய அரசை வாய் சண்டைக்கும், வம்பு சண்டைக்கும் இழுக்கிறார்கள். மத்திய அரசின் மீது ஏதாவத ஒரு பழியை சுமத்த வேண்டும், அதை வைத்து பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் – அண்ணாமலை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து மாற்றி விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்வதற்காக ஏபிபி நாடு ஊடகத்தின் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். நம்மைத் தொடர்புகொண்ட ஏபிபி நாடு நிர்வாகி, “இதை ஏபிபி நாடு வெளியிடவில்லை. இது உண்மையான நியூஸ் கார்டு இல்லை. போலியானது” என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

“பிச்சை எடுப்பவர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது” என்று தமிழ்நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை விமர்சித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ்நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian  

Result: False