
இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்தி தெரிந்தால்தான் இந்தியன் – அண்ணாமலை. இந்திதான் இந்தியாவின் மூத்த மொழி. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழில் பேசி கட்டணக் கழிப்பறையைக் கூட பயன்படுத்தமுடியாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். அதன் படி தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு நிர்ப்பந்தித்து வருவது தெளிவானது. இந்த நிலையில், இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்று அண்ணாமலை கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் நியூஸ்கார்டை பகிர்ந்து வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரஸ் அஸ்வின் இந்தி தேசிய மொழியில்லை என்று கூறிய போது கூட அது உண்மைதான், இந்தி வெறும் இணைப்பு மொழி என்று கூறியவர் அண்ணாமலை. இந்தி மூத்த மொழி என்று இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் கூட கூற மாட்டார்கள். அப்படியிருக்க, திடீரென்று இந்தியாவின் மூத்த மொழி இந்தி என்று அண்ணாமலை கூறியிருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு இல்லை. எனவே, அதன் செய்திக் குழுவைத் தொடர்பு கொண்டு கேட்டோம். இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தனர்.
இந்த நியூஸ் கார்டை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடியபோது, இதே போன்ற நியூஸ் கார்டை டிசம்பர் 26, 2024 அன்று தினமலர் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், “இது சட்ட விரோதம்: அண்ணாமலை. அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி பெயர், முகவரி விபரங்களுடன் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது சட்டவிரோதம்: பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.
அடுத்ததாக இந்த நியூஸ்கார்டில் உள்ள தகவலை அண்ணாமலை கூறினாரா என்று அறிய தொடர்ந்து தேடினோம். இதில் உள்ள கருத்தை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடிய போது, அப்படி அண்ணாமலை கூறியதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இந்த நியூஸ் கார்டை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி அவரது கருத்தை அறிய முயற்சி செய்தோம். ஆனால் அவரை நம்மால் தொடர்புகொள்ள முடியவில்லை.
அதே நேரத்தில் அவரது எக்ஸ் தளத்தைப் பார்த்த போது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதில் பதிவாக அண்ணாமலை வெளியிட்டிருந்த பதிவு கிடைத்தது. அதிலும், இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்பது போன்ற கருத்தை அண்ணாமலை கூறவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்தி தெரிந்தால்தான் இந்தியர்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:‘இந்தி தெரிந்தால்தான் இந்தியன்’ என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
