‘’விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடி சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து தேசிய கொடிக்கு அவமரியாதை,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீக்கியர்கள் கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திய தேசிய கொடியால் சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத செயல்போல சித்தரிக்க சமூக ஊடகங்களில் முயற்சி நடந்து வருகிறது. போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை என்றும் பயங்கரவாதிகள்தான் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்றெல்லாம் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசியக் கொடியை அவமரியாதை செய்துவிட்டனர் என்று சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

அவமரியாதை செய்யும் சீக்கியர்களின் கைகளில் காலிஸ்தான் கொடி உள்ளது. டெல்லியில் போராடி வரும் சீக்கியர்கள் காலிஸ்தான் கொடியுடன் வந்ததாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த வீடியோ பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதை ஆய்வு செய்தோம்.

Archive

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2023 ஜூலை 25ம் தேதி இந்த வீடியோவை ஒருவர் தன்னுடைய எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. தன் நாட்டுக் கொடியையே அவமரியாதை செய்யும் முதுகெலும்பில்லாத மனிதர்கள் என்று அந்த பதிவில் கடுமையாக விமர்சித்திருந்தார். கனடாவில் நடந்ததாக அந்நாட்டு பிரதமரை டேக் செய்து சிலர் இதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது.

Archive

இதன் அடிப்படையில் கனடா, காலிஸ்தான், இந்தியத் தேசிய கொடி என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது கனடாவின் வான்கூவர் என்ற நகரில் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் 2023 ஜூலையில் போராட்டம் நடந்த செய்தி நமக்கு கிடைத்தது. 2023 செப்டம்பரில் இந்திய ஊடகமான டெக்கான் ஹெரால்டில் இது தொடர்பாக செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: deccanherald.com I Archive

இதன் மூலம் இந்த சம்பவம் இந்தியாவில் டெல்லியில் தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. மேலும் இவர்கள் இந்திய விவசாயிகளும் இல்லை. இவர்கள் கனடா நாட்டில் இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசிய கொடியை காலால் மிதித்து அவமாியாதை செய்த சீக்கியர்கள் என்று பரவும் வீடியோ 2023ல் கனடா நாட்டில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடிக்கு அவமரியாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Misleading