
ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு கட்டிய ராம்பன் (Ramban) பாலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆற்றின் கரையை ஒட்டி பிரம்மாண்ட இரண்டு தனித்தனி 2 வழி மேம்பால நெடுஞ்சாலை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அட இது வெளிநாடு இல்லைங்க, இன்றைய மோடிஜியின் ராஜ்ஜியத்தில் ஜம்மு காஷ்மீர்❤️” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜம்மு காஷ்மீரில் ராம்பன் என்ற இடத்தில் மோடி அரசு கட்டிய பாலம் ஒன்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைப் பார்க்க கிராஃபிக்ஸ் அனிமேஷன் வீடியோ போல் உள்ளது. எனவே, இது இனி கட்டப்பட உள்ள பாலமாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.
உண்மைப் பதிவைக் காண: instagram.com
காஷ்மீரில் ராம்பன் என்ற இடத்தில் பிரம்மாண்ட நெடுஞ்சாலை மற்றும் யு டேர்ன் பாலத்தை மத்திய அரசு அமைத்துள்ளதா என்று அறிய கூகுளில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது அங்கு பாலம் கட்டப்பட்டு 2023ம் ஆண்டு திறந்திருப்பது தெரிந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முதல் ஊடகம் வரை பலரும் வெளியிட்டிருந்த பதிவுகளை பார்த்தோம். எதிலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற பாலம் இல்லை.
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். அப்போது இந்த பாலத்தின் வீடியோவை பல வெளிநாட்டினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் “சீனாவில்” என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர். ஆனால் சீனாவில் இது எங்குள்ளது என்று அவர்கள் குறிப்பிடவில்லை.
உண்மைப் பதிவைக் காண: Facebook
சில பதிவுகளில் இது சீனாவில் உள்ள E-Han Expressway என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி ஏதேனும் சாலை உள்ளதா என்று தேடிய போது அது தொடர்பான உறுதியான செய்தி, பதிவு ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடிய போது சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகமான FlyOverChina-ன் ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்று பாலத்தின் வீடியோ கிடைத்தது.
அதில், “சீனாவின் குயிசூ (Guizhou) மாகாணத்தில் அன்ஷுன் (Anshun city) நகரில் கட்டப்பட்டுள்ள யு டேர்ன் ரேம்ப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் சீனாவின் யுடேர்ன் பாலத்தை எடுத்து எடிட் செய்து இந்தியாவில் காஷ்மீரில் மோடி கட்டிய காலம் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது தவறானது என்பது உறுதியாகிறது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
முடிவு:
சீனாவில் கட்டப்பட்ட உயர் அடுக்கு யு டர்ன் பாலத்தை கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் மாற்றி, காஷ்மீரில் கட்டப்பட்ட பாலம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு கட்டிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
