உத்தரப்பிரதேச நிலம் பிஜ்னூரில் உள்ள மதராஸாவில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஒரு பெரிய அறையில் ஏராளமான வாள்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் உள்ள மதரஸாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்! 6 மௌலவிகள் கைது! எல்எம்ஜி இயந்திரத் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதுதான் கவலைக்குரிய விஷயம்! ஒரு நிமிடத்தில் 8000 ரவுண்டுகள் சுடும் இயந்திர துப்பாக்கிகள்! உங்களின் எதிர்காலத்தை இவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேசத்தில் மதராஸா ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆயுதங்கள் சிக்கியது என்று குறிப்பிட்ட பலரும் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்த வருகின்றனர். எனவே, இந்த தகவல் உண்மைதானா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இப்படி சம்பவம் ஏதும் சமீபத்தில் நடந்ததா என்று தேடிப் பார்த்தோம். அப்போது 2019ம் ஆண்டில் மதராஸாவில் போலீஸ் சோதனை செய்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைது செய்திருப்பது தெரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு நிமிடத்தில் 8000 ரவுண்ட் சுடும் துப்பாக்கி கிடைத்ததாக செய்தி இல்லை. பல நாட்டு துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் கிடைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த தகவல் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பது உறுதியாகிறது.

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் இணையதளத்தில் பதிவேற்றித் தேடிப் பார்த்தோம். அப்போது, இந்த புகைப்படம் பஞ்சாபில் உள்ள சீக்கிய கத்தி தயாரிக்கும் ஆலையில் எடுக்கப்பட்டது என்று 2018ல் வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. அதில், இந்த புகைப்படத்தை பாப்புலர் ஃபிரண்ட் கட்சி அலுவலகத்திலிருந்து எடுத்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இது பஞ்சாவில் உள்ள கத்தி தயாரிக்கும் ஆலையில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் அந்த ஆலையின் உரிமையாளர் பச்சன் சிங்கிடம் கேட்ட போது, "சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் எங்கள் ஆலைக்கு வந்து புகைப்படம் எடுத்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது" என்று இந்தியா டுடே செய்தியாளரிடம் உறுதி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: varthabharati.in I Archive I indiatoday.in I Archive 2

சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆம் ஆத்மி நிர்வாகி வீட்டிலிருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. அந்த படங்களுள் இந்த புகைப்படமும் இருந்தது. இது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

பஞ்சாபில் சீக்கிய வாள் தயாரிக்கும் இடத்தின் புகைப்படத்தை எடுத்து உ.பி-யில் உள்ள இஸ்லாமியப் பள்ளியிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுங்கள் எள்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உ.பி மதராஸாவில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் புகைப்படம் பஞ்சாபில் உள்ள சீக்கிய வாள் தயாரிப்பு மற்றும் விற்பனை கடையில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உத்தரப்பிரதேச மதராஸா ஒன்றில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False