
‘’இந்தி ஒரு மென்மையான மொழி,’’ என்று இளையராஜா கூறியதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

செப்டம்பர் 7, 2020 வெளியான இந்த ஃபேஸ்புக் பதிவில், இளையராஜா பெயரை குறிப்பிட்டு ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஒரு மொழியை கற்றுக் கொண்டால்தான், அந்த மொழியின் புலமை தெரியும். இந்தி ஒரு மென்மையான மொழி – இளையராஜா,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், #Breaking என்று குறிப்பிட்டுவிட்டு, இளையராஜா இந்தி பற்றி பேசியதாக எழுதியுள்ளனர். இதன்படி பார்த்தால், சமீபத்தில் இளையராஜா இப்படி பேசியிருப்பதாக அர்த்தம் எழுகிறது. அவர் கடந்த காலத்தில் பேசியிருந்தால், அதனை #Breaking எனக் குறிப்பிட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை. #Breaking என ஒரு செய்தி பகிரப்படும் பட்சத்தில் அது மிகச் சமீபத்தில் வெளியான செய்தியாக இருக்க வேண்டும். இந்த ஃபேஸ்புக் பதிவு, செப்டம்பர் 7 அன்று பகிரப்பட்டுள்ளது. அன்றைய நாளில், இளையராஜா அவ்வாறு பேசியுள்ளாரா என்பதுதான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம்.

ஏனெனில், சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் ஸ்ரிஷ் என்பவருடன் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், யுவன் சங்கர் ராஜா, ‘’I am a தமிழ் பேசும் Indian,’’ என்று அச்சிடப்பட்ட டிஷர்ட்டையும், ‘’Hindi theriyathu poda!!,’’ என்று அச்சிடப்பட்ட டிஷர்ட்டை நடிகர் ஸ்ரிஷ்ஷூம் அணிந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், ‘’இந்தி தெரியாது போடா‘’ என அச்சிடப்பட்ட டிஷர்ட்டை அணிந்து, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெளியிட தொடங்கினர். இந்த விசயம் பெரிய டிரெண்டிங் ஆக மாறியது.
செப்டம்பர் 5ம் தேதி முதல் இந்த டிரெண்டிங் நிகழ்ந்த நிலையில், அதற்கடுத்த நாட்களில், இளையராஜா பற்றிய செய்தியை #Breaking எனக் கூறி இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர்.
அதாவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்திக்கு ஆதரவாக, இந்திக்கு எதிராக பேசுவதைப் போல இதில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், உண்மை என்னவெனில், சமீபத்தில், இளையராஜா அப்படி எங்கேயும் பேசவில்லை. இதுபற்றி எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. ஆனால், இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டுமே இப்படி ஒரு செய்தியை பகிர்ந்துள்ளதால், இதன் மீது சந்தேகம் அதிகரித்தது.
இதன்பேரில், கடந்த ஒரு வார காலமாக முயற்சித்து, இளையராஜாவின் வழக்கறிஞர் தரப்பிற்கு தகவல் தெரிவித்து, விளக்கம் கேட்டோம்.
இதனை இளையராஜா கவனத்திற்குக் கொண்டு சென்றவர்கள், அதன் பின் நம்மிடம் மறுப்பு தெரிவித்தனர். ‘’இதுபோல சமீப நாட்களில் எங்கேயும் இளையராஜா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவரது பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி இத்தகைய தகவலை பரப்பியுள்ளனர். இது உண்மையல்ல,’’ என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவே, இது தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறானது என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False

Why cant you check with the person originally posted this. Also you need to check with the news channel appearing in the post
Henceforth I will be more careful in sharing messages which is doubtful.