
‘’தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகஸ்ட் 7ம் தேதி பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்துள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் அணியும் நிகழ்வை எதிர்த்து, பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்ட அறிவிப்பு தொடர்பாக எழுதப்பட்ட போஸ்டரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
அதன் மேலே, ‘’ ஓகே!!! ஓகே !!!! திமுக 2021 தேர்தலில் கவுரவமாக தோற்கும் என நினைத்தேன்!!! போறபோக்க பார்த்தால் 234 தொகுதியிலும் ஆர் கே நகர் ரிசல்ட் தான்👍👍😁😁😁 வீரமணி புண்ணியத்தில்……,’’ என எழுதப்பட்டுள்ளது.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை நன்கு உற்று கவனித்தாலே எளிதாக ஒரு விசயம் புரியவரும். அதாவது, 2020ம் ஆண்டில் ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி பின்பற்றப்படுகிறது.
ஆனால், நாம் ஆய்வு செய்யும் பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில், ஆகஸ்ட் 7ம் தேதி எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இது 2020ம் ஆண்டின் நிகழ்வுடன் தொடர்புடையது இல்லை என்று தெளிவாகிறது.

இதேபோல, இந்த போராட்ட அறிவிப்பில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் என எழுதப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இதனை திமுகவுக்கும், கி.வீரமணிக்கும் தொடர்புபடுத்தி எழுதியுள்ளனர். உண்மையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிர்வாகி கோவை ராமகிருஷ்ணன் ஆவார்.
இதற்கடுத்தப்படியாக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் இதுபோன்ற போராட்ட அறிவிப்பை எப்போது வெளியிட்டது என விவரம் தேடினோம். அப்போது, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதியன்று இத்தகைய போராட்டத்தை அறிவித்த கையோடு, நடத்தியும் உள்ளனர் என்ற தகவல் கிடைத்தது. இதுபற்றிய வீடியோ செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, ‘’2017ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இத்தகைய போராட்டத்தை நடத்தியுள்ளனர். அப்போது எழுதப்பட்ட சுவரொட்டியின் புகைப்படத்தை நடப்பு ஆண்டில் நிகழ்வதைப் போல தவறான தகவல் இணைத்துப் பகிர்ந்து வருகின்றனர்,’’ என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா?
Fact Check By: Pankaj IyerResult: False

தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கிடையாது. ஆனூர் ஜெகதீசன்
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.கு.ராமகிருஷ்ணன் ஆவார். திரு.கொளத்தூர் மணி அவர்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவராவார்.