காஷ்மீரில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் வைரல் வீடியோ
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370 நீக்கம், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link 1 I Archived Link 2
பெண்களின் மிகப்பெரிய ஊர்வலம் ஒன்றின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில், “இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் லட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் தங்கள் நிலத்தை இந்தியாவில் இருந்து விடுவிப்பதற்காக நேற்று வீதி எடுத்தனர்... இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெரிய பேரணியை மறைக்காததால் இந்த வீடியோவை உலகம் முழுவதும் பரப்புமாறு காஷ்மீர்களில் ஒருவர் கேட்டுக்கொண்டார். எனவே, தயவுசெய்து முடிந்தவரைப் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த பதிவை, Ajmal Fareeth Jalaldeen என்பவர் ஜூலை 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் காஷ்மீர் பெண்கள் ஊர்வலம் செல்வது தெரிந்தது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகி உள்ளது. அதில் நேற்று பேரணி நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அதாவது ஆகஸ்ட் 6ம் தேதி பேரணி நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
காஷ்மீரில் கடந்த 4ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு உள்ளது. சாலைகளில் நடமாட, வீட்டைவிட்டு வெளியே வர தடை உள்ளது. மேலும், அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் சூழலில் இவ்வளவு பெரிய பேரணி எப்படி நடந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த வீடியோவின் ஒரு காட்சியை மட்டும் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ பற்றிய பல தகவல் நமக்கு கிடைத்தன.
2019 மார்ச் 10ம் தேதி இந்த வீடியேவை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது தெரிந்தது. அதில், இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்திய பெண்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், 2018 டிசம்பர் 12ம் தேதி இந்த வீடியோவை PMLN VIDEOS தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.
உண்மையில் இந்த பேரணி எப்போது, எங்கு நடந்தது என்று தேடியபோது தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவும் தகவலே கிடைத்தது. அதே நேரத்தில், இந்த வீடியோ தகவல் உண்மையில்லை என்று altnews செய்தி வெளியிட்டதும் நம்முடை ஃபேக்ட் கிரஸண்டோ (https://www.factcrescendo.com) இந்தி பிரிவு செய்தி வெளியிட்டதும் தெரியவந்தது.
நம்முடைய ஆய்வில்,
ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பது உறுதியாகி உள்ளது.
இந்த வீடியோவை கடந்த மார்ச் மாதம் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளது.
2018 டிசம்பரிலேயே இந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், காஷ்மீரை இரண்டாக பிரிப்பதை எதிர்த்து ஆகஸ்ட் 6ம் தேதி பெண்கள் மிகப்பெரிய பேரணி நடத்தினார்கள் என்பது தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:காஷ்மீரில் லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் வைரல் வீடியோ
Fact Check By: Chendur PandianResult: False