
‘’ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் வீழ்ந்த படம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Sarika Lashkar என்பவர் கடந்த 22, ஏப்ரல் 2014 அன்று இந்த பதிவை பகிர்ந்திருக்கிறார். ஆனால், இந்த பதிவு தற்போதும் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இவ்விரு புகைப்படங்களும் ஒன்றுதான். இதில், ஜெயலலிதா, சசிகலா காலில் ஒருவர் விழுந்து வணங்க, அதனை அருகில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பார்க்கிறார். அவரை ப.சிதம்பரம் எனக்கூறி, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.
உண்மை அறிவோம்:
இந்த புகைப்படம் பற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் முன்பாக, வேறு யாரேனும் இதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனரா என தேடிப் பார்த்தோம். அப்போது, 2015, மே, 25 அன்று Guru Priya என்பவர் பகிர்ந்த பதிவை காண நேரிட்டது. அந்த புகைப்படம், சுமார் 19,000 பேரால் பகிரப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தாலே தெளிவாக தெரியும். கடந்த 2001ம் ஆண்டில், ஜெயலலிதா முதல்வர் பதவியேற்க முடியாமல் போனதை தொடர்ந்து, தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டபோது, எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது. இந்த புகைப்படத்தில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருப்பதை தெளிவாக பார்க்கலாம். அதேபோல, ஜெயலலிதா காலில் விழுபவர் தம்பிதுரை ஆவார்.
இருந்தாலும் ஒரு சந்தேகத்திற்கு, Yandex இணையதளம் சென்று, இந்த புகைப்படத்தை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது நமது சந்தேகம் உண்மைதான் என தெரியவந்தது. ஆம். அவர் தம்பிதுரைதான். சிதம்பரம் இல்லை.

http://tamilnadupolitics.blogspot.com/ என்ற இணையதளம் மேற்கண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அந்த இணையதளத்தில், ஜெயலலிதா காலில் விழுந்த தமிழக அமைச்சர்கள் எனக் குறிப்பிட்டு, 2005, செப்டம்பர் 13 அன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில்தான் இந்த புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இப்போது போல 15 ஆண்டுகள் முன்பாக, தகவல்தொழில்நுட்ப வசதிகள் கிடையாது. எனவேதான், இந்த புகைப்படம் மங்கலாக தெரிகிறது.

ஜெயலலிதா காலில் விழுந்தவர் ப.சிதம்பரம் கிடையாது. தம்பிதுரைதான் என இதன்மூலமாக தெளிவாகிறது. ஜெயலலிதா தனது கடைசி காலத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தம்பிதுரையும் இருந்தார். அந்த புகைப்படம் ஒரு தெளிவிற்காக, இங்கே தரப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தையும், இவர்கள் குறிப்பிடும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புரியும்.

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையல், ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்து வணங்கினார் என்ற தகவல் தவறு என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவுகள் அனைத்தும் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஜெயலலிதா காலில் விழுந்தார் ப.சிதம்பரம்: ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Parthiban SResult: False
