பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். இதை அரசியலாக்கக் கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Pollachi 2.png
Facebook LinkArchived Link

2019 மார்ச் 12 தேதியிடப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ‘பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். இதை அரசியலாக்கக் கூடாது – பொள்ளாச்சி ஜெயராமன்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Subramanian Nallusamy என்பவர் 2019 நவம்பர் 1ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பொள்ளாச்சியில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பழைய விஷயங்களை மறுபதிவு செய்யும் வகையில் இந்த பதிவு வெளியாகி உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதை பொள்ளாச்சி ஜெயராமன் மறுத்துவந்தார். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பொள்ளாச்சி ஜெயராமன் கருத்து கூறியதாக இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.

Pollachi 3.png

உண்மையில் பொள்ளாச்சி ஜெயராமன் இதை கூறினாரா, தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். ‘பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். இதை அரசியலாக்கக் கூடாது’ என்ற பகுதி மட்டும் தனியாக போட்டோ மார்ஃபிங் செய்து வைக்கப்பட்டது போல உள்ளது. நன்கு உற்றுப் பார்த்தால் அந்த பகுதி மட்டும் தனியாக தெரிவதைக் காண முடிந்தது. இதை உறுதி செய்ய இந்த நியூஸ் கார்டை fotoforensics.com ஆய்வுக்கு உட்படுத்தினோம். அப்போது அந்த பகுதி தனியாக சேர்க்கப்பட்டது உறுதியானது.

Pollachi 4.png
Search LinkTwitter LinkArchived Link

தந்தி டி.வி வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை தேடினோம். கூகுள் இமேஜ் தேடலில், ‘thanthi tv – பொள்ளாச்சி ஜெயராமன்’ என்று டைப் செய்து தேடினோம். அப்போது மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றிருப்பது போன்ற நியூஸ் கார்டு ஒன்று கிடைத்தது. அதில், 12/03/2019 என்று தேதி குறிப்பிட்டு இருந்தது. மேலும், அந்த நியூஸ் கார்டில், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கை அரசியலாக்க தி.மு.க முயற்சிக்கிறது – பொள்ளாச்சி ஜெயராமன்’ என்று இருந்து. இதன் மூலம், இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருக்கலாம் என்று தெரிந்தது. இந்த நியூஸ் கார்டு தந்தி டி.வி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நமக்குக் கிடைத்தது. 

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினாரா என்று கூகுளில் தேடினோம். அதுபோல எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடியபோது, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ‘நான் களங்கமற்றவன் என்பதை நிரூபிக்க முடியும், உண்மையான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்து கூறிவந்துள்ளது நமக்கு கிடைத்துள்ளது. மேலும், இந்த விவகாரம் வெளிவர தான்தான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Search LinkFacebook LinkArchived Link

இதன் மூலம், தந்தி டி.வி வெளியிட்ட நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறாத கருத்தை சேர்த்து வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False