மணிப்பூரில் பர்மா ஆதரவு கிறிஸ்தவ ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் நிதி உதவியுடன் பர்மிய ராணுவத்தின் ஆதாரவுடன் ராணுவம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் பின்னணி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ராணுவ அணி வகுப்பு போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. வரிசையாக வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் முன்னிலையில் அவர்கள் ஒன்றாக நிற்கின்றனர். அவர்களுக்கு முன்பாக ராணுவ வீரர்கள் போன்று ஆடை அணிந்த சிலர்  பேனர் ஒன்றை பிடித்துள்ளனர். நிலைத் தகவலில், “மணிப்பூரில் கிறிஸ்தவ நிதியுதவி மற்றும் பர்மிய இராணுவத்தின் ஆதரவுடன் ஊடுருவல் காரர்களின் ஒரு பெரிய இராணுவம் எழுப்பப்பட்டுள்ளது, அவர்கள் உள்ளூர் மெய்தி இந்துக்களை விரட்ட அனைத்து வகையான அட்டூழியங்களையும் செய்து வருகின்றனர். உண்மை என்னவெனில், எதிர்க்கட்சியே வாடிகனுக்கு விற்றுவிட்டதால், மணிப்பூரில் அதிகாரம் பெறுவதற்காக, கிறித்துவ போப்பின் ஏஜென்ட் நாடாளுமன்றத்தில் சலசலப்பை உருவாக்குகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை Karthikeyan Pandian என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மணிப்பூரில் இரு இனக் குழுக்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தொடர்பான செய்திகள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சூழலில் மற்றொரு தரப்பினருக்கு ஆதரவாக, அவர்கள் செய்வது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் பதிவுகளும் வௌியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மெய்தி இன மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் நிதி உதவியுடன், மியான்மார் நாட்டு ஆதரவுடன் பழங்குடியின மக்கள் ராணுவத்தை உருவாக்கியுள்ளனர் என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் எந்த ஒரு அபாயகரமான நிகழ்வும் காணப்படவில்லை. சிலர் ராணுவ வீரர்கள் போன்று ஆடை அணிந்துள்ளனர். அவர்கள் கைகளில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பது போலவோ, வன்முறையில் ஈடுபட்டது போலவோ எந்த ஒரு காட்சியும் இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருப்பது போன்ற லோகோவுடன் கூடிய வீடியோ கிடைத்தது. அதிலும் ராணுவ வீரர்கள் போன்று ஆடை அணிந்து பேரணி செல்வதைக் காண முடிந்தது.

அந்த வீடியோவை சற்று ஓட்டிப் பார்த்தோம். வீடியோவில் 26வது நிமிடத்திற்குப் பிறகு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சிகள் வருகின்றன. இந்த வீடியோ தெளிவாக இருந்தது. பலரது கையில் செல்போன் இருப்பதைக் காண முடிந்தது. துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் எதையும் காணவில்லை. பேரணியில் பங்கேற்றவர்கள் குண்டு துளைக்காத (புல்லட் ப்ரூஃப்) அடை அணிந்தது போல உள்ளது. “மணிப்பூரின் பாசிச ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் (Youth Protest against Fascist Rule in Manipur)” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. Public ground to Wall of remembarance, July 5, 2023 என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: indiatodayne.in I Archive 1 I indiatimes.com I Archive 2

இதன் அடிப்படையில் கூகுளில் சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே (வட கிழக்கு) உள்ளிட்ட ஊடகங்களில் போராட்டம் நடந்தது தொடர்பான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில் எந்த இடத்திலும் வன்முறை நிகழ்ந்தது என்றோ, அவர்கள் அரசுக்கு எதிராக ராணுவத்தை உருவாக்கினார்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. வீடியோவை முழுமையாக பார்த்தோம். கடைசியில் சிலர் கையில் குச்சிகளை வைத்து கோஷம் எழுப்புகின்றனர். அம்மாநில முதல்வரின் உருவப்படம் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

மைத்தி மக்களின் தலையை வெட்டுவோம், கொலை செய்வோம், தலையை துண்டிக்கப் போகிறோம் என்று எல்லாம் குக்கி இன மக்கள் ஊர்வலம் சென்றார்கள் என்று குறிப்பிட்டு இதே வீடியோவை வட இந்தியாவில் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதும் தெரிந்தது. இது தொடர்பாக ஃபேக்ட் செக் ஊடகம் ஒன்று ஆய்வு செய்துள்ளது. அதில் ஊர்வல வீடியோவை அம்மொழி தெரிந்த நபர்களை வைத்து மொழிமாற்றம் செய்ததாகவும் அதில் வன்முறையைத் தூண்டும் வகையில் கோஷங்கள் எழுப்பப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் பழங்குடியின மக்கள் பேசியதற்கு தவறான மொழிபெயர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்த்தது. 

இவை எல்லாம் பழங்குடி குக்கி இன மக்கள் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணி, போராட்டத்தைக் கூட அரசுக்கு எதிராக உருவான ராணுவம் என்றும் எதிர் தரப்பினரை கொலை செய்வோம் என்று கூறியதாக தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு விஷமத்தனமாக சமூக ஊடகங்களில் பரப்பி, பதற்றத்தை உருவாக்க முயல்வதை உறுதி செய்கின்றன. நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் இது அரசுக்கு எதிரான ராணுவம் அல்ல, போராட்டத்தின் வீடியோ என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மணிப்பூரில் நடந்த பேரணி மற்றும் போராட்ட வீடியோவை இந்துக்களுக்கு மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் உருவாக்கிய ராணுவம் என்று தவறான தகவல் சேர்த்து பகர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மணிப்பூரில் பர்மா ஆதரவு கிறிஸ்தவ ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False