வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டதா பிபிசி?– ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இது உண்மையா என்று பார்த்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I hindutamil.in I Archive 2

தமிழ் இந்து நாளிதழ் தன்னுடைய (Tamil The Hindu) ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூன் 7, 2023 அன்று கட்டுரை ஒன்றின் இணைப்பை வெளியிட்டுள்ளது. அதில், “வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டது பிபிசி: வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிபிசி-யின் இந்த செய்தி தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

உண்மை அறிவோம்:

பிபிசி நிறுவனம் இந்தியாவில் ஈட்டும் வருவாய்க்கு உரிய வரி செலுத்தவில்லை என்று கூறி சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடி, குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் பேசப்பட்டது.

இந்த நிலையில் பிபிசி நிறுவனம் இந்தியாவில் வரியை குறைத்து செலுத்தியதை ஒப்புக்கொண்டது என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. அந்த செய்தியில் வருமானவரித் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வெளியாகவில்லை. வருமான வரித்துறை வட்டாரம் கூறுகிறது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ் இந்து கட்டுரையிலும் அப்படியே குறிப்பிடப்பட்டிருந்தது. பிபிசி தாமாக ஒப்புக்கொண்டு அறிக்கை எதையும் வெளியிடவில்லை. வரி முறைகேட்டில் ஈடுபட்டதை பிபிசி ஒப்புக்கொண்டது என்று வருமான வரித்துறையும் அறிவிக்கவில்லை. 

உண்மைப் பதிவைக் காண: newindianexpress.com I Archive

உண்மையில் வருமான வரித்துறை ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. வருமான வரித்துறை வட்டாரம், அதிகாரி வட்டாரம் தெரிவித்தது என்று சில செய்திகள் கிடைத்தன. ஆனால், உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் இந்த செய்தியை மறுத்துள்ளனர் என்றும் நமக்கு செய்தி கிடைத்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்த அந்த செய்தியிலும் கூட வருமானவரித் துறை அதிகாரிகளிடம் பேசியதாகவும், அவர்கள் இந்த செய்தியை மறுத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உறுதியான ஆதாரம் எதுவும் அதில் இல்லை. அதிகாரப்பூர்வமாக பிபிசி தரப்பில் இருந்தோ, வருமானவரித் துறை தரப்பிலிருந்த செய்தி, அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. எதிர் காலத்தில் விசாரணை முடிவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

அடிப்படை ஆதாரம் இன்றி வெளியான இரண்டு செய்திகளை வைத்துக்கொண்டு எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது. யார் உண்மையை சொல்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பிபிசி அல்லது அரசு தரப்பில் இருந்து விளக்கம் வெளியாகும் வரையில் இந்த தகவல் தவறான புரிதலை ஏற்படும் வகையிலேயே இருக்கும்.

முடிவு:

எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி வரி முறைகேட்டில் ஈடுபட்டதை பிபிசி ஒப்புக்கொண்டது என்று செய்தி வெளியாகி உள்ளது. பிபிசி ஒப்புக்கொண்டதாக பரவும் தகவல் தவறானது என்று வருமான வரித்துறை கூறியதாக மேலும் சில செய்தி வெளியாகி உள்ளது. இரண்டு மாறுபட்ட செய்தி வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி எந்த கருத்தையும் வெளியிடாத சூழலில் இந்த செய்தி குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டதா பிபிசி?– ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

Written By: Chendur Pandian 

Result: Explainer