
இந்தியர்களே உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று இஸ்ரேலியர்கள் கத்துவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆண் ஒருவர் பெண் ஒருவரை மிரட்டி அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” #இந்தியர்களே திரும்பி உங்க நாட்டுக்கு போங்க என்று இஸ்ரேலியர்கள் கோபமாக கத்துகிறார்கள்… இது தெரியாம இங்க இருக்கும் சங்கிகள் #இஸ்ரேலியர்களுக்கு சொம்படிக்கிறாங்க ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இஸ்ரேலுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலில் இந்தியர்களுக்கு எதிரான மனநிலை உள்ளது என்பது போன்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய பெண்ணை, வெளியேறும்படி இஸ்ரேலியர் மிரட்டியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோ தெளிவாக இல்லை… “கோ டு இந்தியா” என்று அந்த யூதர் கூறுவது போல உள்ளது. ஆனால் அந்த பெண்ணை பார்க்கும் போது இந்தியர் போலவும் இல்லை. யஷ்வா அல்லது யாஷ்வா என்று சொல்வது போலக் கேட்கிறது. அதற்கு அந்த ஆண் இது இஸ்ரேல் என்று மிரட்டுவதும் கேட்கிறது. இவை எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, yandex.com தேடல் தளத்தில் நமக்கு ஒரு பதிவு கிடைத்தது. அதில், “angel disguised preaching the gospel but got rejected” என்று இருந்தது. அதாவது “தேவதூதன் நற்செய்தியை அறிவித்தபோது அது நிராகரிக்கப்பட்டது” என்று இருந்தது. அதைப்படியே கூகுளில் டைப் செய்து தேடிய போது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
2025 மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அந்த பதிவில் இஸ்ரேலில் நற்செய்தி (கிறிஸ்தவம்) அறிவிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தெளிவான முழுமையான அந்த வீடியோவை பார்க்கும் போது அந்த பெண் யாஷ்வா என்றும் ஜீசஸ் கிரைஸ்ட் (Jesus Christ) என்றும் கூறுவதைக் கேட்க முடிந்தது. இதன் மூலம் இஸ்ரேலில் இயேசு பற்றி போதனையில் அந்த பெண் ஈடுபட்ட போது யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தெளிவானது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே பெண் இஸ்ரேலில் இயேசு பற்றி போதனை செய்த போது இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்ட வேறு வீடியோக்களும் இருந்தது. அவற்றில் எல்லாம் கிறிஸ்தவ மத போதகர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த நாட்டைச் சார்ந்தவர் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக அவர் இந்தியர் என்று எந்த பதிவிலும் குறிப்பிடப்படவில்லை. இவை எல்லாம் அந்த பெண் இந்தியர் என்பதால் விரடப்படவில்லை, இயேசுவை அறிவித்ததால் விரட்டப்பட்டார் என்பது தெளிவாகிறது.
வீடியோவில், அந்த யூதர் “இந்தியாவுக்கு செல் இது இஸ்ரேல், யூதர்களுடையது” என்று கூறுகிறார். ஆனால், அந்த பெண் இந்தியர் என்பதற்கு எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும், இந்தியர் என்பதால் இந்தியர்கள் அனைவரும் இஸ்ரேலை விட்டு வெளியே போக வேண்டும் என்று அவர் கூறவில்லை. யூதர்கள் மத்தியில் கிறிஸ்தவம் பற்றி அந்த பெண் பிரசாரம் செய்ததாலேயே வெளியேறும்படி கூறுகிறார். அதை ஒட்டுமொத்தமாக இந்தியர்களை இழிவு செய்தது போன்று தவறாக பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.
இஸ்ரேலில் யூதர்கள் மத்தியில் இயேசு பற்றி போதனை செய்த பெண்ணை, யூதர் ஒருவர் தடுத்த காட்சியை இந்தியரை விரட்டிய யூதர் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.
இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இஸ்ரேலில் இயேசு பற்றி போதித்த பெண்ணை இஸ்ரேலியர் விரட்டிய வீடியோவை இந்தியரை விரட்டிய இஸ்ரேலியர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“இந்தியர்களே திரும்பி உங்கள் நாட்டுக்கு செல்லுங்கள்” என்று இஸ்ரேலியர் மிரட்டினாரா?
Written By: Chendur PandianResult: Misleading
