
நர்மதா நதியில் பாறைக்கு மேல் கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக இயற்கையாக, அறிவியலுக்கு அப்பாற்பட்ட முறையில் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆற்றங்கரையில் யாரோ பாறைகள் மீது சிறு கற்களை அடுக்கி வைத்து எடுத்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*”இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஓடும் நர்மதா நதியில் (நர்மதா பரிக்கிரமா செல்லும் வழியில்) ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்கின்றன. வெள்ளத்தின் போதும் பாறைகள் நிலையாக நிற்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நர்மதா நதியில் இயற்கையான முறையில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிறு பாறைகள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டது போல் உள்ளது என்று பலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், பாறைகள் அடுக்கி வைக்கப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது இயற்கையான முறையில் இந்த பாறைகள் உருவானது போல இல்லை. இயற்கையாக உருவாகி இருந்தால் ஆற்றங்கரை முழுவதும் அப்படி இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வித்தியாசமான முறையில் மனிதர்களால் அடுக்கி வைக்கப்பட்டது போல உள்ளது. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். சமீப நாட்களாக இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை காண முடிந்தது. சற்று பின்னோக்கி பழைய பதிவு ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்த வீடியோவை Gravity Glue என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் பதிவிட்டிருந்தார்.
அதில், “Live Stream # 20190813 Stone Balance by Michael Grab Https://www.gravityglue.com” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது மைக்கேல் கிராப் என்பவரின் கற்களை சமநிலையில் வைத்தல் நேரடி காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது பற்றித் தெரிந்துகொள்ள அந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். அதில் முழுக்க பாறைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அவர் எடுத்திருந்த புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டிருந்தார்.
அவரது இணையதள பக்கத்திற்குச் சென்று பார்த்தோம். அதில், தன்னை அவர் பேலன்ஸ் ஆர்டிஸ்ட் (Balance Artist) என்று குறிப்பிட்டிருந்தார். சுய விவர குறிப்பு பகுதியில், “அமெரிக்காவில் 2008ம் ஆண்டு எதிர்பாராத விதமாகப் பாறை மீது பாறைகளை அடுக்கி சமநிலைப்படுத்துதலைச் செய்தேன். அதிலிருந்து இந்த பாறை அடுக்குதல் கலை என்னுடைய படைப்பாற்றலாக, பொழுதுபோக்காக மாறிவிட்டது” என்பது போல குறிப்பிட்டிருந்தார்.
உண்மைப் பதிவைக் காண: gravityglue.com I Archive
நர்மதா ஆற்றில் இப்படி பாறைகள் அடுக்கப்பட்டிருக்கும் அபூர்வ காட்சி ஏதும் உள்ளதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அமெரிக்காவில் பாறை மீது பாறை வைத்துக் கலை படைப்பு வெளியிட்டு வருபவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நர்மதா நதியில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு பாறை மீது மூன்று நான்கு கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக நிற்கின்றன என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் வித்தியாசமான பேலன்சிங் கலைஞர் ஒருவரின் கற்கள் அடுக்கலை நர்மதை ஆற்றில் இயற்கையான முறையில் தோற்றிய அடுக்கு கற்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“நர்மதா நதியில் இயற்கையாக கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி” என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
