
டெல்லியில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து யமுனை நதிக்கு ஆரத்தி காட்டுவது மீண்டும் தொடங்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆற்றுக்கு ஆரத்தி எடுத்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் பாஜக ஆட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்ததைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரையில் யமுனா ஆரத்தி மீண்டும் தொடங்கியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி பாஜக வசம் சென்றுள்ளது. இந்த சூழலில், ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆற்றுக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்று ஒரு வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 2025ல் தான் முதன் முறையாக யமுனை ஆரத்தி நடந்ததா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: indiatimes.com I Archive I hindustantimes.com I Archive
கூகுளில் டெல்லி, யமுனா, ஆரத்தி என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். 2015ம் ஆண்டிலேயே ஆரத்தி தொடங்கப்பட்டதாக செய்திகள் மற்றும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. 2015ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி யமுனை ஆற்றை சுத்தப்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் இந்த ஆரத்தியைத் தொடங்கியதாக செய்திகள் நமக்குக் கிடைத்தன.
யமுனை ஆரத்திக்காகவே பிரத்தியேகமான இடத்தை டெல்லி அரசு கட்டமைத்துள்ளது என்றும் இதை டெல்லி துணை நிலை ஆளுநர் 2024ம் ஆண்டு திறந்து வைத்ததாகவும் செய்திகள் நமக்கு கிடைத்தன. தொடர்ந்து அது தொடர்பாக தேடிய போது, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு யமுனா ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், மக்கள் இதை இலவசமாக காணலாம் என்றும் தகவல் கிடைத்தன.
யூடியூபில், “Yamuna Aarti” என்று டைப் செய்து தேடிய போது பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பு, சில ஆண்டுகளுக்கு முன்பே யமுனை ஆரத்தி தொடர்பான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இவை எல்லாம் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆரத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
டெல்லி யமுனை ஆரத்தி 2015ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் சூழலில், 2025ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்த யமுனை ஆரத்தி தொடங்கப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் யமுனை ஆரத்தி தொடங்கப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
