
என்.எல்.சி விவகாரத்தில் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ரூ.7 கோடி கமிஷன் பெற்றார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நக்கீரன் அட்டைப்படம் போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “NLC விவகாரத்தில் தவாக தலைவருக்கு 7 கோடி கமிஷன்… தட்டி எழுப்பிய நக்கீரன்! என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “இதை வாங்கிகிட்டு தான் என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுக்காமல். விவிசாயிகளுக்காக போராட்டம் செய்யும் பாமக வை வசைபாடுறியா ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த படத்தை Chathiriyan Ramesh Raja என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஏப்ரல் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
என்எல்சி நிறுவனத்திடமிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன் ரூ.7 கோடி கமிஷன் பெற்றதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நக்கீரன் அட்டைப்படமாகவே இதை வெளியிட்டது போன்று பகிரப்பட்டுள்ளது. இந்த அட்டைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
நக்கீரனின் சமீபத்திய புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்த்தோம். பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வைத்து அட்டைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. முந்தைய இதழ்களைப் பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதைப் போன்று எந்த ஒரு அட்டைப்படத்தையும் நக்கீரன் வெளியிடவில்லை என்பது தெரிந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அட்டைப் படத்தில் Vol 31 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, 31வது ஆண்டு புத்தம் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், நக்கீரனின் சமீபத்திய பதிப்பிலோ Vol 35 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய அட்டைப்படத்தை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெளிவானது. மேலும், மார்ச் 16-19, 2023 தேதியிட்ட இதழ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தேதியில் நக்கீரன் இதழ் வெளியாகவில்லை. மார்ச் 18, 2023 தேதியிட்டு நக்கீரன் இதழ் வெளியாகி இருந்தது. அதில் அட்டைப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படம் இருந்தது. அந்த குறிப்பிட்ட தேதியிட்ட இதழில் என்எல்சி தொடர்பாக கட்டுரை எதுவும் வெளியாகவும் இல்லை.

2023 ஏப்ரல் 1 தேதியிட்ட சமீபத்திய நக்கீரன் இதழில் வேல்முருகன் எம்.எல்.ஏ ரூ.7 கோடி வாங்கினார் என்று ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். “எரியும் என்.எல்.சி. விவகாரம்! கொந்தளிப்பில் கடலூர்!” என்று என்.எல்.சி பிரச்னை தொடர்பாக கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், வேல்முருகன் ரூ.7 கோடி கமிஷன் பெற்றார் என்று குறிப்பிடவில்லை.
இது பற்றி அறிந்துகொள்ள நக்கீரன் செய்திப் பிரிவை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. அங்கு பணியாற்றும் நண்பர்களிடம் பேசினோம். அப்படிக் கட்டுரை எதுவும் வரவில்லை என்றனர். நக்கீரன் தரப்பில் இது பற்றி விளக்கம் அளித்தால், அதை வெளியிடத் தயாராக உள்ளோம்.
இது தொடர்பாக வேல்முருகன் எம்.எல்.ஏ தரப்பைத் தொடர்புகொண்டு பேசினோம். “குறிப்பிட்ட கட்சியினர் வேண்டுமென்றே இந்த வதந்தியை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதில் உண்மையில்லை” என்றனர்.
முடிவு:
என்எல்சி நிர்வாகத்திடமிருந்து வேல்முருகன் எம்.எல்.ஏ ரூ.7 கோடி கமிஷன் பெற்றார் என்று பரவும் அட்டைப்படம் நக்கீரன் வெளியிட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:என்.எல்.சி விவகாரத்தில் வேல்முருகன் ரூ.7 கோடி கமிஷன் பெற்றார் என்று நக்கீரன் செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
