மலேசியாவில் குடிபோதையில் வந்த லியோனியை விரட்டிய மக்கள் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political

மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றுக்கு திண்டுக்கல் லியோனி குடிபோதையில் வந்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

திண்டுக்கல் லியோனி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குடிபோதையில் கூட்டத்திற்கு வந்த லியோனி. மலேசியாவில் நடக்கவிருந்த பட்டிமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த தி.மு.க நிர்வாகியும் தமிழ்நாடு பாடநூல்கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி குடிபோதையில் கூட்டத்திற்கு வந்ததால் மலேசிய தமிழர்களால் விரட்டியடிப்பு. இது உங்கள் கட்சி கூட்டமல்ல என மலேசிய தமிழர்கள் காட்டம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை Guru Muruganantham என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மலேசியாவில் நிகழ்ச்சிக்கு சென்ற தி.மு.க நிர்வாகி திண்டுக்கல் லியோனி மது அருந்திவிட்டு சென்றதால் விரட்டியடிக்கப்பட்டார் என்று வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இப்படி பரவும் வீடியோவை பார்த்தோம். அதில் நிகழ்ச்சிக்கு மிக தாமதமாக வந்ததற்காக அவருடன் சிலர் வாக்குவாதம் செய்வதைக் காண முடிந்தது. அவர் தனக்கு நேரம் தெரிவிக்கப்படவில்லை என்று மன்னிப்பும் கேட்கிறார். ஆனால், விடாமல் சிலர் தொந்தரவு செய்வதை காண முடிகிறது. இதன் மூலம் அவர் குடித்துவிட்டு வந்தார் என்பதால் தகராறு செய்தார்கள் என்ற தகவல் தவறானது என்பது தெளிவானது.

அடுத்து நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டின் வடிவமைப்பு மற்றும் டிசைன் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், “இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தது தெரிந்தது. இதன் மூலம் இந்த நியூஸ் கார்டும் போலியானது என்று உறுதியானது. 

மலேசியாவில் என்ன பிரச்னை என்று தேடிய போது, விகடனில் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது. அதில், மழை உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்ததாகவும், ஒரு சிலர் தகராறு செய்ததாகவும், பலர் நிகழ்ச்சியைக் காணத் தயாராக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் நிகழ்ச்சி நடந்தது என்றும், நிகழ்ச்சியைப் புறக்கணித்தவர்களுக்குப் பணம் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் லியோனி மது அருந்திவிட்டு நிகழ்ச்சி சென்றதால் அவரை மலேசியத் தமிழர்கள் விரட்டி அடித்தார்கள் என்று பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மலேசியாவில் மது அருந்திவிட்டு நிகழ்ச்சிக்கு வந்த லியோனி என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மலேசியாவில் குடிபோதையில் வந்த லியோனியை விரட்டிய மக்கள் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False