ஆட்சியமைக்க உதவியவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்றும் 40 தொகுதிகளில் தோற்கடித்தால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று ஐந்து நியூஸ் கார்டுகளை ஒன்றாக பகிர்ந்துள்ளனர். அதில், "தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? தமிழ்நாட்டு மக்கள் எங்களை 40 தொகுதிகளிலும் தோற்கடித்ததால்தான் இந்த பட்ஜெட்டில் நாங்கள் அவர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு நாங்கள் ஏன் நிதி ஒதுக்க வேண்டும்? ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்" என்று இருந்தது.

மற்றொரு நியூஸ் கார்டில், இது எங்க டீலிங் பட்ஜெட்! நாங்கள் ஆட்சியமைக்க உதவியவர்களுக்காக நிதி ஒதுக்குவதில் என்ன தவறு? இதெல்லாம் பதிலுக்கு பதில் உதவும் பழக்கம்தான். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்" என்று இருந்தது.

வேறு ஒரு நியூஸ் கார்டில், "பாரபட்சம் இல்லாத பட்ஜெட். பாஜகவை ஆட்சியில் அமர செய்த ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் பாரபட்சம் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன் - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்" என்று இருந்தது.

இன்னொரு நியூஸ் கார்டில், "பாஜக கூட்டணிக்கான பட்ஜெட். பாஜகவின் ஆட்சியை தக்கவைக்கவே ஆந்திராவுக்கும், பீகாருக்கும் மட்டும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இது NDA கூட்டணிக்கான பட்ஜெட் - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டுகளை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாஜக ஆட்சியைத் தக்க வைக்க அளிக்கப்பட்ட பட்ஜெட், பாஜக-வுக்கு வெற்றி தராத தமிழ்நாட்டுக்கு எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் நிர்மலா சீதாராமன் அப்படி பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாடாளுமன்றத்தில் அவர் பேசியது தொடர்பான செய்தி வீடியோ சமூக ஊடகங்களில் உள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன். "பட்ஜெட்டில் நிறைய மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லையென்றும், இரண்டு (பீகார், ஆந்திரா) மாநிலங்களைப் பற்றி மட்டுமே பேசியதாகவும் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) கூறுகின்றனர். காங்கிரஸ் இந்த நாட்டில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. பல பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருக்கிறது. அனைத்து பட்ஜெட்டுகளிலும், அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிடும் வாய்ப்பு கிடைக்காது என்பது காங்கிரஸுக்கு நன்றாகத் தெரியும்" என்று பேசியதாக செய்திகள் உள்ளன.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுகள் போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை பார்த்த உடனேயே நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய ஆய்வைத் தொடர்ந்தோம். இதில் உள்ள ஒரு நியூஸ் கார்டு பற்றி தனியாக கட்டுரை வெளியிட்டிருந்தோம். எனவே, அதை தவிர்த்து மற்ற நியூஸ் கார்டுகள் பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். ஜூலை 24, 2024 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற எந்த நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுகளை அனுப்பினோம். அவரும் இவை எல்லாம் போலியானவை என்று உறுதி செய்தார். மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுகளில் சிலவற்றை மட்டும் இது போலியானது, இதை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியான பதிவின் இணைப்பையும் நமக்கு அனுப்பினார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டுகள் அனைத்தும் போலியானவை என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாங்கள் ஆட்சியமைக்க உதவியவர்களுக்காக நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்றும் பாஜகவை ஆட்சியில் அமர செய்த ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு மட்டும் பாரபட்சம் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆட்சியமைக்க உதவியவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் என்ன தவறு என்று நிர்மலா சீதாராமன் கேட்டாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False