தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
"பாஜகவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை. பாஜகவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க எந்த அவசியமும் ஏற்படவில்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக எந்த செய்தியும் இல்லை. நாடாளுமன்றத்தில் அவர் பேசும் போது அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை. உண்மையில் நிர்மலா சீதாராமன் அப்படிக் கூறியிருந்தால் எல்லா ஊடகங்களிலும் அல்லது குறைந்தபட்சம் தி.மு.க ஆதரவு ஊடகங்களிலாவது பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருப்பார்கள். நிர்மலா இப்படிக் கூறினாரா... அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று அறிய கூகுளில் தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் நிர்மலா பட்ஜெட்டால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க உள்ள நன்மைகள் என்று வெளியான செய்திகள்தான் கிடைத்தன.
நியூஸ் கார்டை பார்க்க புதிய தலைமுறை வெளியிட்டது போல் உள்ளது. ஆனால், அதன் சில உள் வடிவமைப்பு, தமிழ் ஃபாண்ட் புதிய தலைமுறை வெளியிட்டது போல் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். ஜூலை 24, 2024 அன்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற எந்த நியூஸ் கார்டையும் புதிய தலைமுறை வெளியிடவில்லை.
இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், புதிய தலைமுறையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு வெளியான பதிவையும் நமக்கு அனுப்பினார்.
உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் பதிவு தவறானது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False