இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு தீக்குளித்தாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

இலங்கையில் தற்போது நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு ஒருவர் தீக்குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புத்த பிக்கு ஒருவர் தன் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ளும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கையின் தற்போதைய கொடுமையான  நிலவரம்  பெளத்த குரு இலங்கை அரசு எதிர்ப்பை காட்டும் விதமாக , தம்மை தாமே எரியூட்டி  தற்கொலை செய்து கொள்ளும் கொடூர  காட்சி!!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வீதியோவை Dr. S A F I என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இலங்கையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ஆட்சியாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தற்போதைய நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு ஒருவர் தன் மீது நெருப்பு வைத்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சி என்று வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

இலங்கையில் புத்த பிக்குகள் யாராவது தற்போது தீக்குளித்து தற்கொலை செய்தார்களா என்று அறிய, புத்த பிக்கு, தற்கொலை, தீக்குளிப்பு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது dailymail.co.uk இணையதளத்தில் இலங்கையில் புத்தபிக்கு தீக்குளித்து உயிரிழந்த வீடியோவோடு செய்தி வெளியிட்டிருந்தனர். 2013ம் ஆண்டு மே மாதம் இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் கொடூரமான காட்சிகள் கொண்டது என்பதால் அந்த வீடியோ அகற்றப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: indianexpress.com I Archive 1 I bbc.com I Archive 2

தொடர்ந்து தேடிய போது 2013ம் ஆண்டு புத்தபிக்கு ஒருவர் மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதைக் கண்டித்தும், பவுத்தர்களைக் கிறிஸ்தவர்கள் மத மாற்றம் செய்வதைக் கண்டித்தும் தீக்குளித்து உயிரிழந்தார் என செய்திகள் கிடைத்தன. அதன் அடிப்படையில் தேடிய போது, சில படங்களுடன் செய்திகள் நமக்குக் கிடைத்தன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள நபர்தானா இவர் என்பதில் சந்தேகம் இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: metatube.com I Archive

தொடர்ந்து தேடிய போது, metatube.com என்ற ஊடகத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் உயிரிழந்த புத்தபிக்குவின் பெயர் போகவத்த இந்தரதன (Bowatte Indarathana) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிபிசி உள்ளிட்ட ஊடகங்களில் குறிப்பிட்டிருந்த அந்த புத்த பிக்குவும் இவரும் ஒன்று என்பது தெரிந்தது.

2013ம் ஆண்டு பசுக்கள் கொல்லப்படுவதற்கும் சிறுபான்மையினர் பவுத்தர்களை மதம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புத்த பிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வீடியோவை, 2022 இலங்கை உள்நாட்டுக் கலவர சூழலுடன் தொடர்புப்படுத்திப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இலங்கையில் 2013ம் ஆண்டு புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்த காட்சியை, தற்போது நிலவும் உள்நாட்டு குழப்பத்துடன் தொடர்புபடுதுத்தி  சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு தீக்குளித்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False