சோனியாவுக்கு மரியாதை கொடுக்கத் தவறிய மோடி என்று பரவும் படம்- உண்மை என்ன?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

சோனியா காந்தி வணக்கம் தெரிவித்த போது, பிரதமர் மோடி கைக்கட்டி நின்று அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்பட பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் மோடி கைக்கட்டியபடி நிற்க, சோனியா காந்தி வணக்கம் சொல்வது போன்று அந்த படம் இருந்தது. அந்த படத்துடன், “மரியாதை தெறியாத நீயெல்லாம் மனித இனத்துக்கே அருகதை அற்றவன்,,, நீயெல்லாம் நாட்டுக்கு பிரதமர்னு வெளியே சொன்னால் நாட்டு மக்களுக்கு தான் அவமானம்,,, எதிர்கட்சி தலைவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையே கொடுக்க தெறியாத நீயெல்லாம் நாட்டு மக்களுக்கு எப்படிடா மரியாதை கொடுப்ப?? உன்னையும் தூக்கிட்டு திறிறாங்க பாரு கேடுகெட்ட முட்டாளுங்க அவனுங்களுக்கு சாணியை கறைத்து வாயில ஊத்தினாலும் குடிப்பானுங்க,,” என்று இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த பதிவை யாராவது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்களா என்று பார்த்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த புகைப்படம் மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி கைக்கட்டி நிற்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வணக்கம் செய்கிறார். ஆனால், சோனியா காந்தியின் பார்வை மோடி மீது இல்லை. வேறு யாருக்கோ அவர் வணக்கம் சொல்வது போல உள்ளது. ஆனால், பிரதமர் மோடிக்குச் சோனியா காந்தி வணக்கம் சொன்னது போலவும், ஆனால் பதிலுக்கு வணக்கம் சொல்லாமல் மோடி அவமரியாதை செய்ததாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் உண்மையானதுதானா, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஆண்டுகளாகப் பல செய்தி ஊடகங்களில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. இந்த படத்தை பிடிஐ எடுத்ததாக ஒரு செய்தி ஊடகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. இதன் மூலம் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக இருக்காது என்பது மட்டும் தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

தொடர்ந்து இந்த புகைப்படம் பற்றித் தேடினோம். அப்போது. 2014ம் ஆண்டு தசரா பண்டிகையின் போது, ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் ராம்லீலா நிகழ்ச்சியில் போது எடுக்கப்பட்டது என்று ஒரு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் யூடியூபில் மோடி, சோனியா காந்தி, ராம்லீலா என பல கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது 2014ம் ஆண்டு வெளியான பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: firstpost.com I Archive

ஜீ நியூஸ் 2014ம் ஆண்டு வெளியிட்டிருந்த முழு வீடியோவைப் பார்த்தோம். சோனியா காந்தி மற்றும் மன்மோகன்சிங் அப்போது அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்த்தன் ஆகியோர் நின்று கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடியின் கார் வருகிறது. காரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு வணக்கம் கூறி அவரும் அவர்களுடன் சேர்ந்து நிற்கிறார். 

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். யாரோ முக்கிய பிரமுகர் வருகைக்காக அவர்கள் காத்திருப்பது தெரிகிறது. பின்னர் அப்போது குடியரசு துணைத் தலைவராக இருந்த முகம்மது அமீத் அன்சாரி வருகிறார். அவரும் அவர்களுடன் இணைந்துகொள்கிறார். கடைசியில் குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி வருகிறார். பின்னர் அனைவரும் மேடைக்குச் செல்கின்றனர்.

வீடியோவின் 3.30வது நிமிடத்தில் பிரதமர் மோடி சோனியா காந்தி, மன்மோகன் சிங்குடன் பேசிக் கொண்டிருக்கும் போது, வேறு ஒருவருக்குச் சோனியா காந்தி வணக்கம் தெரிவிக்கும் காட்சி வருகிறது. அப்போது, பிரதமர் மோடி கைக்கட்டி நின்றபடி பார்த்துக்கொண்டிருக்கிற காட்சியும் தெளிவாகத் தெரிந்தது. இந்த காட்சியை மட்டும் புகைப்படமாகப் பகிர்ந்து, சோனியா காந்தி வணக்கம் தெரிவித்த போது, மோடி வணக்கம் தெரிவிக்கவில்லை என்று விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.

முடிவு:

சோனியா காந்தியை அவமரியாதை செய்த மோடி என்று பகிரப்படும் படம் தவறானது என்பதுடன் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் தெளிவாக தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சோனியாவுக்கு மரியாதை கொடுக்கத் தவறிய மோடி என்று பரவும் படம்- உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: False