அகமதாபாத்தில் சாலையோர வியாபாரிகளை விரட்டிவிட்டு காய்கறிகளை சாலையில் கொட்டிய வீடியோவை இப்போது எடுக்கப்பட்டது போன்ற சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் காய்கறிகளை குஜராத் போலீசார் கொட்டிய பழைய வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அதில், "இத்தனைக்கும், அரசுக்கு என்ன தான் வேண்டும்..?, இந்த வீடியோ அகமதாபாத் குஜராத்தில் இருந்து. காய்கறி விக்கிறவன் விற்கமாட்டான் என்றால் மக்கள் எப்படி சாப்பிடுவார்கள்...? இவ்வளவு பட்டும் கூட அறிவு இல்லாத குஜராத் மக்கள்

மிக நீண்ட காலமாகவே மீண்டும் மீண்டும் சங்கிகளையே ஜெயிக்க வைக்கிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

உண்மை அறிவோம்:

குஜராத் போலீஸ் மற்றும் அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக-வை விமர்சித்துப் பதிவிடப்பட்டுள்ளது. குஜராத் போலீஸ் சாலையோர கடை வியாபாரிகளை அடித்துத் துன்புறுத்துவது போலவும் இதற்கு அம்மாநில அரசு உடந்தை என்பது போலவும் பதிவு உள்ளது. மேலும், இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது என்ற எண்ணம் வரும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வீடியோ கொரோனா லாக்டவுன் காலத்தில் பார்த்த நினைவு இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். கூகுளில், அகமதாபாத், லாக்டவுன், போலீஸ், காய்கறி கடைகள் என சில அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2020 லாக்டவுன் நேரத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

2020 ஏப்ரல் 1ம் தேதி வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் லாக்டவுன் காலத்தில் சாலையில் காய்கறி விற்றவர்கள் மீது அகமதாபாத் போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகவே, அகமதாபாத் கிருஷ்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.ஆர்.சௌதிரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive

2020 கொரோனா பயம் காரணமாக நாடு முழுவதும் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தொடக்கத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்குக் கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை இருந்தது. பிறகு காய்கறிகள், மளிகை வாங்க குறிப்பிட்ட நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தொடக்கக் காலத்தில் நாடு முழுக்க இப்படிப்பட்ட சம்பவம் நடந்ததாகச் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அறியாமையால் குஜராத் போலீசார் செய்த வீடியோவை, மக்களுக்கு காய்கறி கிடைக்கக் கூடாது என்று குஜராத் போலீஸ் நடந்து கொண்டது போன்று தவறாக வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் மறைத்து தவறான அர்த்தம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது இதன் மூலம் தெளிவாகிறது.

முடிவு:

சிறு வியாபாரிகளை சித்ரவதை செய்யும் குஜராத் போலீஸ் மற்றும் பாஜக அரசு என்று பரவும் வீடியோ 2020 கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது என்பதும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் மீது அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காய்கறிகளை சாலையில் கொட்டிய குஜராத் போலீஸ் வீடியோ - தற்போது எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: Missing Context