
‘’ சீனாவில் திடீர் புழு மழை: மக்கள் பீதி,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Claim Tweet Link l Archived Link
தினகரன் இணையதளத்தில் இதுபற்றி வெளியிடப்பட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இது சீனாவில் எடுக்கப்பட்ட காட்சியா என்றால், உண்மைதான். ஆனால், வாகனங்களிலும், சாலைகளிலும் புழுக்கள் போன்று இருப்பவை உண்மையில், புழுக்கள் அல்ல. அவை, சீனாவில் காணப்படும் ஒரு வகை மரங்களின் ஆண் இனத்தில் உருவாகும் பூங்கொத்து. நீளமான குச்சியின் இருபுறமும் கோர்த்துக் கட்டியதுபோல இந்த பூக்கள் இருக்கும்.
இதுதொடர்பான விவரம் தேடுகையில் நமக்கு, இதுபற்றிய முழு வீடியோ ஆதாரம் ஒன்று கிடைத்தது. இந்த வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து, எடிட் செய்து, கார்களில் புழுக்கள் இருப்பது போன்று வதந்தி பரப்புகிறார்கள். கார்களின் அருகே மரம் உள்ளதை இதே வீடியோவின் தொடர்ச்சியில் பார்க்க முடிகிறது.

சீனாவில் புழு மழை என்று பல்வேறு மொழிகளிலும் வீடியோ, புகைப்படங்கள் பரவியதைத் தொடர்ந்து, சீன மக்கள், இதுபற்றி விளக்கம் அளிப்பதைக் கண்டோம். அவற்றில், இது ஆண்டுதோறும் தமது நாட்டில் நடைபெறும் நிகழ்வுதான் என்றும், புழுக்கள் ஏதுமில்லை, poplar என்ற மரத்தின் ஆண் பூங்கொத்துகள்தான் இது என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ட்விட்டரில் வதந்தி பரப்பிய அமெரிக்க ஊடகம் (@TheInsiderPaper) ஒன்றின் பதிவுக்கு, சீனர் ஒருவர் பதில் அளித்திருப்பதையும் காணலாம்.
தவிர, இதுபற்றி ஆங்கில ஊடகங்கள் ஏற்கனவே ஃபேக்ட்செக் செய்திருப்பதையும் காண முடிகிறது.
Chinese necklace poplar என்ற பெயரில் அழைக்கப்படும் மரங்களில்தான் இப்படியான பூங்கொத்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் வசந்த காலத்தின் தொடக்கத்தில் இவ்வாறு உதிர்வது வழக்கமான ஒன்றுதான்.

இந்த மரத்தின் அறிவியல் பெயர் Populus (poplar). இவை Populus wilsonii வகை மரங்களில் ஒரு பிரிவாகும். பூமியின் வட அரைகோள நாடுகளில் மட்டுமே காணப்படும் மரக் குடும்பமாகும்.

சீனாவில் காடுகள் மட்டுமின்றி, சாலையோரங்களிலும் இந்த மரம் அதிகளவில் காணப்படும். இதில், ஆண் மரம், பெண் மரம் தனித்தனியாக இருக்கும். அதுபோலவே, அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளும் தனியாக இருப்பதால், இலையுதிர் காலம் முடிந்து, வசந்த காலம் தொடங்கும்போது, இனப்பெருக்கத்திற்காக, மகரந்தங்களை உதிர்க்கும். அவை பார்க்க கம்பளிப்பூச்சி அல்லது புழு போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை விழுந்த பிறகு, அந்த மரம் துளிர்க்க ஆரம்பிக்கும்.

இவ்வகை பூங்கொத்துகளுக்கு, அறிவியல் ரீதியாக, catkin என்று பெயர். அதேசமயம், இவற்றால், காற்று மாசு ஏற்பட்டு, ஆண்டுதோறும் சீன மக்கள் அவதிப்படுவதும் வழக்கம். இதுபற்றி விரிவாகப் படிக்க இந்த லிங்க் பார்க்கவும்.

poplar tree catkins என்ற கீவேர்ட் பயன்படுத்தி, கூகுளில் தேடினால் இதுபற்றிய கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோக்கள் பலவற்றை நாம் காணலாம்.
இந்த வகை மரங்கள் பற்றிய சீன அரசின் அதிகாரப்பூர்வ குறிப்பு ஒன்றும் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:சீனாவில் புழு மழை என்று பரவும் செய்தி உண்மையா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
